Friday, November 29, 2013

நம்மாழ்வாரும்,எஸ்.கே.ஸாலிஹூம்

“இலக்கு நிர்ணயித்து வாழ்ந்தால், நம்மால் பிறர் பயனடைவர்; அவர்களால் நாம் சிதைய மாட்டோம்... ஒவ்வொரு பொருளும் அருகிலுள்ள பொருளைப் பாதிக்கும் என்பது பௌதீக விதி” இந்த 40 பேரும் மற்றவர்களைப் பாதிப்பார்கள் , மற்றவர்களால் சிதையமாட்டார்கள் . யார் இவர்கள் ? ..... நன்றி : ஆசிரியர்: எஸ்.கே.ஸாலிஹ் செய்தியாளர் / சமூக ஆர்வலர்www.kayalpatnam.com 

கம்பங்கூழும், கரட்டு மேடும்! ........................................... பசுமை மறையும் காயலைக் கண்டு ஆதங்கம்... நவீனத்தை மறந்து இயற்கையில் நகரம் தவழ ஏக்கம்... மனித வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளே மனிதனை அடிமையாக்கி வருவது கண்டு வருத்தம்... 

நாள்தோறும் மாலை வேளைகளில் கடற்கரையில் நண்பர்களுடன் கூடும்போதெல்லாம் இவை குறித்து கொஞ்சமேனும் பேசத் தவறுவதேயில்லை நாங்கள். ஒருநாள், முகநூலில் பார்த்த தகவலை - எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சகோதரர் சாளை பஷீர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். 

கரூர் மாவட்டம், சுருமான்பட்டியில், வானகம் என்ற பெயரில் 133 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் குறித்த ஆராய்ச்சி நடுவம் உள்ளதாகவும், நம்மாழ்வார் என்ற தமிழ்ச் சித்தரால் அங்கு மாதந்தோறும் 3 நாட்கள் முகாம் நடத்தப்படுவதாகவும், நவம்பர் மாத முகாம் 12, 13, 14 தேதிகளில் நடைபெறவுள்ளதாகவும் எனக் கூறுவதே அந்த முகநூல் தகவல். எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது என்ற என்.எஸ்.இ. மாமா, சமூக ஆர்வலர் ‘மெகா’ நூஹ் காக்கா, எழுத்தாளர் சாளை பஷீர், திரைப்பட இயக்குநரும் - எங்கள் நண்பருமான அமீர் அப்பாஸ் ஆகியோருடன் நானும் முகாமில் கலந்துகொள்ள அப்போதே முடிவு செய்தோம்.

 “அந்த இடம் எப்படி இருக்கும்?” “அங்கு என்ன நடக்கும்?” “தங்கும் வசதிகள் எல்லாம் எப்படி இருக்கும்?” முகாமில் பங்கேற்க முடிவெடுத்த நாள் முதல் என்.எஸ்.இ. மாமாவும், ‘மெகா’ நூஹ் காக்காவும் பெரும்பாலும் இப்படித்தான் விவாதித்துக்கொண்டிருந்தனர். நான், என்.எஸ்.இ.மாமா, ‘மெகா’ நூஹ் காக்கா ஆகியோர் நவம்பர் 11ஆம் தேதி இரவு 09.30 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டோம். மறுபுறத்தில் சாளை பஷீர் காக்கா சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் புறப்பட்டார். 12.11.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் நாங்கள் திருச்சியைச் சென்றடைந்தோம். அங்கு, ஜங்ஷன் பள்ளிவாசலில் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அடுத்த பயணத்திற்கு நாங்கள் ஆயத்தமாக, சாளை பஷீர் காக்கா வந்து சேர்ந்தார். அனைவருமாக, காலை 07.15 மணிக்கு, ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து கடவூர் செல்லும் பேருந்தில் புறப்பட்டோம். * * * 


* * * * * * * * * * * * பேருந்துச் சக்கர அச்சோடு சேர்ந்து நகர்ப்புறமும் தொலைந்தது... கிராம வாசல் திறந்தது. மணப்பாறையைத் தாண்டியதும், அடுத்தடுத்து வந்ததெல்லாம் புழுதி படிந்த வறண்ட கிராமங்கள். ஓலைக் குடிசை... சுற்றிலும் வேலி... சிறிய கோழிக்கூண்டு... அதனருகே - தன் குஞ்சுகளைத் திருட வந்த காகத்தை விரட்டும் கோழிகள்... தொழுவத்தில் கட்டப்பட்ட ஆடுகள்... மணற்பரப்பெங்கும் அதன் புலுக்கைகள்... பரபரப்பான மணற்பரப்பிலிருந்து, ஓய்வும் அமைதியும் நிறைந்த மணற்பரப்பிற்கு செல்வது என்பது மனதை வருடுவதாக இருந்தது... 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காயலர்களும் அனுபவித்த அதே வாழ்க்கைமுறையிலான பகுதிகள். தொலைவில் ஒரு சிறிய பள்ளிக்கூடம்... நிறைய மழலையர்... எப்போதாவது வரும் எங்கள் பேருந்தை மட்டும் பார்த்து உற்சாகதுடன் கையசைத்தது ஒரு கிராமத்து மழலை... பகரமாக நானும் கையசைத்தேன்... அது என்னைக் கவனிக்கவேயில்லை. ஆங்காங்கே படிக்கட்டுகளில் விவசாயக் குடிமக்களும், சில கரைவேட்டி பிரமுகர்களும் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரே அறையைக் கொண்ட ஒடுங்கிய வீட்டிற்குள் அமர்ந்து, தட்டு நிறைய மனைவி தந்த காலை உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு விவசாயி. ஓட்டுநர் வண்டியை குறைந்த கியருக்கு மாற்றினார். 

தலைதூக்கிப் பார்த்தபோது அது உயர்ந்த மலையில் ஏறிக்கொண்டிருந்தது. ஊட்டிக்குச் செல்லும் பாதை போல கொண்டை ஊசி வளைவுகள்... குறைந்த நீர்மட்டத்துடன் குறுக்கிட்டது அழகிய அணைக்கட்டு ஒன்று . ஒருவழியாக காலை 10.00 மணியளவில் எங்களை வரவேற்றது, வானகமும், அதற்குள்ளிருந்த கானகமும். கற்பாறை நிறைந்த கரட்டு பூமி... நதிகள், குளங்கள் என எதுவுமே இல்லாத வனாந்திரம்... கிணற்று நீரை மட்டுமே நம்பி நடக்கும் கொஞ்சம் விவசாயம். 

முழு அளவிலான வேளாண்மை என்பது இப்பகுதியைப் பொருத்த வரை ஓர் அறைகூவல்தான்! நம்மாழ்வாரின் மனத்துணிவை எண்ணுகையில் வியப்பாக இருந்தது. தங்கும் அறையும் கழிப்பறையும் மட்டும் திருப்தியாய் இருந்தால் போதும் என்று முனுமுனுத்தவாறு என்.எஸ்.இ. மாமாவும், ‘மெகா’ நூஹ் காக்காவும் முன்னே நடக்க, 3 நாட்களையும் முழுமையாகத் தாக்குப் பிடிப்பார்களா? என்ற கேள்வியுடன் அவர்களைப் பின்தொடர்ந்தோம் நானும், சாளை பஷீர் காக்காவும். 

காற்று புகுந்து விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஓலைக் குடிலில் ஒன்றுசேர்ந்தோம் இடத்தால் - மதத்தால் - தொழிலால் - பொருளாதாரத்தால் வேறுபட்ட நாங்கள் 40 பேரும். குடிலைச் சுற்றிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அறிவுறுத்தும் காட்சிப் படங்கள் அடங்கிய ஏராளமான பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தன. ஊரில் இஞ்சிகலந்த தேனீர் குடித்துப் பழகிய எங்களை வரவேற்றது கம்பங்கூழும், கொத்தவரைக்காய் வற்றலும். யார் சொன்னது நல்லாயிருக்காது என்று...? வற்றலைக் கடித்தவாறே இரண்டு கோப்பைகள் பருகி வயிறு நிறைத்தோம். 

சிறிது நேரத்தில், எங்களை மரம் நட வருமாறு ஒருவர் அழைத்தார். கையில் சாந்து சட்டிகள், மண்வெட்டிகள், கடப்பாறைகள், குடங்களைத் தாங்கியவாறு அவரைப் பின்தொடர்ந்தோம். மேடு பள்ளம் நிறைந்த நிலப்பரப்பில், குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சென்றடைந்தோம். அனைவருமே மண்வெட்டி பிடித்து, பள்ளம் தோண்டி, அதற்குள் சவுக்கு, மா, நெல்லி, அகத்தி என பலவகை மரங்களை நட்டோம். 

பின்னர் நிலப்பரப்பில் முளைத்திருந்த களை - வெற்றுப் பயிர்களைத் வெட்டித் துண்டுகளாக்கி, குழிக்குள் இட்டோம். மண்ணில் மக்கிய சாணி உரத்தையும் அதனுள் இட்டு, தேங்காய் தும்புகளை மரத்தைச் சுற்றியிட்டு, நீண்ட தொலைவிலிருந்து குடத்தில் நீர் சுமந்து நடந்து வந்து குழிக்குள் ஊற்றியவாறு ஆளுக்கொரு மரம் நட்டினோம். மரம் நட்டுவதென்றால் குழிதோண்டி, நட்டு, நீரூற்ற வேண்டும் என்று எல்லோரையும் போல் கருதிய எங்களுக்கு அங்கு கிடைத்தது அந்த முதற்பாடம். பின்னர் அவ்விடத்தை விட்டும் வசிப்பிடம் திரும்பி வந்தோம். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கள் உடம்புகளிலிருந்து கொட்டிய வியர்வை காய்ந்திருந்தது. மனதிலோ ஒரு வகையான புத்துணர்ச்சி! இவ்வாறு நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் கூட்டு உழைப்பில் அந்த கரட்டு பூமியில் பசுமை மெல்ல தலையாட்டத் தொடங்கியிருந்தது. * * * * * * * * * * * * * * * 

காலை 10.55 மணிக்கு அங்கு வந்த செந்தில் கணேசன், அடுத்தடுத்து கருத்துப் பரிமாற வரவுள்ள அறிஞர்கள் குறித்து அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். ஆம், அவர் கானகத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவர். சிறிது நேரத்தில், அரசு விவசாயத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஹுஸைன் என்பவர் உரையாற்ற வந்தார். 

துவக்கமாக எங்களை தன்னறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். பெயர், ஊர், தொழில், முகாமில் பங்கேற்கும் நோக்கம் என ஒவ்வொருவரும் எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டோம். வியப்பு என்ன தெரியுமா? 

முகாமுக்கு வந்த பலர் தகவல் தொழில் நுட்பத்துறையில் (ஐடி) நல்ல ஊதியம் பெறுபவர்களும், ஆடிட்டர் (கணக்குத் தணிக்கயாளர்) உள்ளிட்ட உயர் பொறுப்புகளிலிருப்போரும், பல்வேறு தொழில்கள் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுவோரும், பரம்பரை பரம்பரையாய் விவசாயம் செய்து வருவோரும்தான்! 

பெரும்பாலும் தோட்டங்களோடு இணைந்த வீடுகளைக் கொண்டிருந்த நமதூரில் நிலப்பற்றாக்குறையைக் காரணங்காட்டி தோட்டங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், தற்போதிருக்கும் நிலையில் - மாடித்தோட்டம் போன்ற பல வழிமுறைகள் மூலம் இயன்றளவு விவசாயம் செய்ய மக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அதற்கான வழிமுறைகளை எதிர்பார்த்தே அங்கு வந்துள்ளதாகவும் காயலர்களாகிய நாங்கள் எங்களது அறிமுகத்தின்போது கூறினோம். 

பின்னர், திரு. ஹுஸைன் பேசத் துவங்கினார். பூச்சுக்கொல்லி கலக்காத இயற்கை விவசாயம் குறித்து உற்சாகத்துடன் உரையாற்றிய அவர், சில நிமிடங்களில் பேரிடியாய் முழங்கத் துவங்கினார். 

>> இந்தியர்கள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் அனைத்துமே விஷம் கலந்தவை... >> 
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின்பால் இன்றைய மக்களுக்குள்ள நாட்டம் மிகுந்த ஆபத்தானது... >> 

மைதாவால் செய்யப்பட்ட புரோட்டாவை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு உண்டால் மலம் வராது... >> 
இதே நிலை நீடித்தால் 100க்கு 75 பேர் குழந்தைப் பேறு அற்றவர்களாகவே இருப்பர்.

 நாட்டில் பெருகி வரும் கருத்தரிப்பு மையங்கள் (Fertility Centres) இதற்குக் கண்கண்ட சான்றுகள்... >> இன்றைய நவீன உணவு முறைகளால் சிறுமியர் 8 வயதில் பூப்பெய்வதும், இளம்பெண்கள் 21 வயதிலேயே மெனோபாஸ் நிலையை அடைவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது..

இவ்வாறு பேசிக்கொண்டேயிருந்த அவர் ஒரு கட்டத்தில், பணி நிறைவுபெற்ற பின்னர் இன்றளவும் என்னை பலர் பல்வேறு வேலைவாய்ப்புகளைக் காண்பித்து அழைக்கின்றனர்... பல்லாயிரம் ஊதியமாகக் கூட கிடைக்கும். ஆனால், இந்த விவசாயத்தை நான் இறைவணக்கமாகக் கருதி மன நிறைவோடு செய்து வருகிறேன் எனக்கூறினார். இப்படியே சென்றது அவர் உரை. 

உரையினிடையே பயிர்களுக்குத் தெளிக்கப்படும் விஷம் குறித்து விளக்கிய அவர், “இதற்கு மேல் இதுகுறித்துப் பேசினால் உணர்ச்சிவயப்பட்டு விடுவேன்...“ என்றார். ஆம்! இன்னும் சிறிது பேசியிருந்தால் அவர் அழுதிருப்பார் அல்லது அநியாயக்காரர்களைத் திட்டித் தீர்த்திருப்பார் போலும்! அந்தளவுக்கு அவருக்கு அழுத்தம் இருந்ததை அவரது சொற்கள் உணர்த்தின. எப்படி குளிப்பது என்பதற்கு அழகான ஒரு முறையைச் சொன்னார். 

“முன்னோர்கள் குளத்தங்கரையில் குளிப்பர். முதலில் கால் நனைத்து, பின்னர் உடல் நனைப்பர். உடல் சூடு தலை வழியே வெளியேறுவதை உணர முடியும். இறுதியில் தலையை நனைப்பர். இன்றோ நாம் குளியலறையில் ஷவர் பாத் எடுக்கிறோம். எடுத்த எடுப்பிலேயே தலைக்கு நீர் ஊற்றுகிறோம். விளைவு...? சூடு தணியாமல் நோய்களை விலைக்கு வாங்குகிறோம்...” கேட்பதற்கே அருமையாக இருந்தது இக்கருத்து. இன்றும் இம்முறையை வேறு வழிகளில் நாம் பின்பற்றலாம்தானே...?

 இவ்வாறாக அவரது உரை அமைந்திருந்தது. பெருமழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த உணர்ச்சிப்பூர்வமான உரை. அவரைத் தொடர்ந்து, பயிர்கள் மீது திரியும் பூச்சிகள் குறித்து திரு. ‘பூச்சி’ செல்வம் பேச வந்தார். (பூச்சிகள் குறித்த அவரது விசாலமான அறிவு காரணமாக, பயிர்களில் ஒட்டுவது போல அவர் பெயருடனும் ‘பூச்சி’ ஒட்டிக்கொண்டதாம்.) 

அசைபட விரிதிரை (வீடியோ ப்ரொஜெக்டர்) துணை கொண்டு - உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து துவங்கி, பூச்சிகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பிரித்து விளக்கி, பூச்சி போலவே இரைந்து ஆற்றிய அவரது உரையின் பாங்கு, பொறுமையாகவும், பக்குவமாகவும் தயாரித்து வெளியிடப்பட்ட பயனுள்ள ஒரு திரைப்படத்தைக் கண்டு முடித்த உணர்வை எங்களுக்குத் தந்தது என்றால் அதை மிகையாகாது. * * * * * * * * * * * * * * * 

மதிய உணவு சாப்பிடும் நேரம். ஐந்து பெரும் பாத்திரங்களில் சோறு, சாம்பார், ரசம், காய்கறிக் கூட்டு, மோர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு பொறுப்பாளர்கள் காத்திருந்தனர். அனைவரும் வரிசையில் நின்று பெற்று உண்டோம். நீண்ட காலத்திற்குப் பிறகு முதன்முறையாக - மருந்தே கலக்காத உணவுப் பொருட்களை உண்டது எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாயிருந்தது தெரியுமா...? 

மதியம் 03.15 மணியளவில் இயற்கை உணவு, சித்த மருத்துவ நிபுணர் மாறன்ஜி பேசத் துவங்கினார். பூச்சுக்கொல்லி மருந்துகள் தெளிக்காமல் இயற்கை முறையிலேயே விவசாயம் செய்வதற்கான வழிமுறைகளை அவர் விளக்கிப் பேசினார். இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து அழகுற விளக்கினார் அவர். உரையின் நிறைவில், அனைவருக்கும் அவர் மருந்து கலக்காத முளை கட்டிய பயறும், நாட்டு வெல்லமும் கலந்த சிறுகடியும் (ஸ்னாக்ஸ்) கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டுகளின் சாறும் வெல்லமும் கலந்த மூலிகை பானமும் வழங்கினார். 

கதிரவன் மங்கியதும் இருள் படர்ந்தது. இருளைத் துரத்திடும் செயற்கை முயற்சிகள் எதுவுமே இல்லை - ஓலைக்குடிலுக்குள் எரிந்த ஒரு குழல் விளக்கைத் தவிர! அரசின் மின் இணைப்பும் இல்லை மின் விளக்குகளும், மின் விசிறிகளும் இல்லை.. பெற்றோமாக்ஸ் போன்ற தூக்கும் விளக்குகள் ஒன்றிரண்டு இருந்தன. அவையனைத்தும் கதிரொளி (solar) மூலம் இயங்குபவை. கிணற்றிலிருந்து நீரை இறைக்கும் நீர் இறைப்பானும் (pump set) கூட கதிரொளியில் இயங்கக் கூடியதாக இருந்தது. 

மின்சாரத்தின் ஆக்கிரமிப்பு தொலைந்ததால் வானத்தின் இயல்பான வெளிச்சம் இருளோடு விளையாடிக் கொண்டிருந்தது. இருளோ வானகத்தின் வெளியெங்கும் இன்ப உலா வந்து கொண்டிருந்தது. நம் கண்களும் இருளுக்குக் கொஞ்சங்கொஞ்சமாகப் பழகி விட்டிருந்தது. 

வானகத்தில் உள்ள கானகத்தின் விரிந்த பரப்பும், ஆழ்ந்த அமைதியும், இருளும், அதிராத வெளிச்சத் தடங்களும் ஒன்று சேர்ந்து மனதிற்குள் தென்றல் போல ஏகாந்தத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. இயற்கை வேளாண்மை என்ற அளவோடு தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல் இயற்கை உணவு, எளிமையும் - உடல் உழைப்பும் - களிப்பும் மிக்க வாழ்க்கை என அழகிய ஒரு வளையத்தை வானக நடுவத்தில் காண முடிந்தது. 

* * * * * * * * * * * * * * * மாலை 06.40 மணியளவில், மண்புழு உற்பத்தி மற்றும் மண்புழு மூலம் இயற்கை உரம் தயாரித்து பெருமளவில் தொழில் செய்யும் திரு. கோபாலகிருஷ்ணன் உரையாற்றினார். மண்புழு குறித்து பட விளக்கங்களுடன் அவர் ஆற்றிய உரையின் நிறைவில், நம் வீட்டில் சேரும் குப்பைகளை நகராட்சியிடம் கொடுக்காமல், அதைக் கொண்டே விவசாயம் செய்வதற்கான எளிய முறை குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பேசினார். 

உரை நிறைவுற்றதும், இரவுணவாக சாம்பார் சோறு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதுபோன்ற வாழ்க்கை முறைக்கு சிறிதளவும் பழக்கப்பட்டிராத என்.எஸ்.இ. மாமாவும், ‘மெகா’ நூஹ் காக்காவும் கொஞ்சம் அவதியாக உணர்ந்ததை மறைப்பதற்கில்லை. என்.எஸ்.இ. மாமா என்னிடம், “ஸாலிஹ்! இன்னைக்கு ஓகே. நாளைக்கு நாம் பக்கத்துல ஏதாவது ஒரு ஊர்ல ரூம் போட்டு தங்கிட்டு, டெய்லி காலைல வந்துட்டு நைட் போவோம்...” என்றார். “பார்ப்போம் மாமா...” என்றேன் நான்.

 எனக்கோ, சாளை பஷீர் காக்காவுக்கோ ஏற்கனவே இதுபோன்ற வாழ்க்கை முறையில் ஓரளவு பட்டறிவு இருந்ததால், இது அவதியாகப் படவில்லை. ஆனால், இயற்கை விவசாயம், எளிய வாழ்க்கை முறையில் தமக்கிருந்த தீராத ஆர்வத்தின் காரணமாக, நாங்கள் அழைத்தவுடனேயே இசைவு தெரிவித்து, அதனடிப்படையில் எங்களோடு வந்திருந்த இவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இன்பமாக இருக்க வேண்டுமே... என்ற ஏக்கம் எங்களிருவரையும் ஆட்கொண்டது. இயற்கைச் சூழலில் வாழ்ந்த கொசுக்களின் அன்புத் தொல்லைகளுக்கிடையிலும், பயணக் களைப்பு மிகுதியாலும் எப்போது உறங்கினோம் என்றே எங்களுக்குத் தெரியாமற்போனது.

 இரண்டாம் நாள்.... * * * * * * * * * * * * * * * 13.11.2013 புதன்கிழமை அதிகாலை 04.30 மணிக்கு கண்விழித்தோம். ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைகளை பயணியருக்கு இஸ்லாம் வழங்கிய சலுகைப்படி நாங்கள் கூட்டாக இணைந்து தொழுதோம். 

எங்களுடன், வேறு சில ஊர்களிலிருந்து வந்திருந்த இரண்டு முஸ்லிம் நண்பர்களும் தொழுகையில் இணைந்துகொண்டனர். தொழுகையை முடித்துவிட்டு, குடிலுக்குத் திரும்புகையில், அங்கிருந்த மாடுகளின் சாணத்தை ஒரு முதியவர் தன் கைகளால் சேகரித்துக் கொண்டிருந்தார். முந்தைய நாளில் வெளியூர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த அப்பெரியவர்தான் நம்மாழ்வார் அய்யா. 

பூச்சி விஷமில்லா இயற்கை விவசாயம்; எளிய வாழ்க்கை முறை என்று முழங்கி, தமிழ் கூறும் உலகையே தன்னை நோக்கி புருவமுயர்த்தச் செய்யுமளவுக்கு புகழ்பெற்றவர். எங்களனைவரையும் குடிலில் சந்தித்து முகம் மலர அவர் வரவேற்றபோது, புகழ்பெற்ற மனிதருக்குரிய எந்த அடையாளத்தையும் அவரிடம் காண முடியவில்லை. “இவரா அவர்?” என வியப்புற்றோம் நாங்கள். மெலிந்த உருவம்... அடர்ந்த மீசை... நீண்ட தாடி... கீழங்கியும், பச்சை நிற மேல்துண்டும், தலைப்பாகையுமே அவரது நிரந்தர உடை! சட்டை அணிவதில்லையாம். 

வயதுதான் 76 ஆக இருந்ததே தவிர, அவரது பேச்சும், செயலும் – துடிப்புமிக்க - இன்றைய 26 வயது இளைஞனையும் விஞ்சியிருந்தது. ஆம்! இத்தனை வயதிலும் அவருக்கு ஒரு பல் கூட விழவில்லை. கண்ணாடி அணியவில்லை. ஏற்கனவே அணிந்திருந்த கண்ணாடியையும் இயற்கை மருத்துவத்தின் மூலம் கழற்றி விட்டாராம். பொறுப்பாளர் ஒருவர் அவருக்கு இயற்கை உணவைத் தட்டில் வைத்துக் கொடுக்க, அதை வாங்கி உண்டவாறே எங்களுடன் பேசினார். 

எல்லோரையும் தன்னறிமுகம் செய்யச் சொன்னார். அறிமுகப்படுத்திக் கொண்டோம். >> நான் இறக்கும் முன் இன்ன செயலை செய்து முடிக்க வேண்டும்... 13.11.2015 அன்று நான் இச்செயலை செய்து முடித்திருக்க வேண்டும்... என ஒரு குறிப்பேட்டில் அன்றாடம் இரவு உறங்குமுன் எழுதி வைக்கச் சொன்னார் அவர்.

 இலக்கு இல்லாத வாழ்க்கை நேர விரயம் என்பதே அவர் சொல்ல வந்த கருத்து. >> ‘படிப்பது’, ‘கற்பது’ இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன? படிப்பது - பிறர் அனுபவத்தை உள்வாங்கல்; கற்பது -- நம் பட்டறிவை ஆய்வுக்கு உட்படுத்தல்.. ஆகா! எத்தனை தத்துவங்கள்...!! அய்யா பேசப்பேச தத்துவங்கள் பொங்கி வழிந்தன. அது உரையல்ல! 

எங்களுடனான உரையாடல். எமது உரையாடலில் வீணாக ஒரு சொல் உதிர்க்கப்பட்டாலும், அதைச் சுட்டிக்காட்டி விளக்குவார். ஒரு பங்கேற்பாளர் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அய்யா விளக்கமளித்தார். மற்றொருவர் கேள்வி கேட்கும்போது, “அதேபோல...” என்று துவங்கினார். “அது என்ன அதேபோல...? உங்க கருத்தை நீங்க சொல்லுங்க!” என்றார். மற்றொருவர் தெளிவின்றி கேள்வி கேட்டார். அய்யா அதை தெளிவுறக் கூறுமாறு கூறியதும், வேறொருவர், “அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்...” என்று கூற முற்பட்டபோது இடைமறித்த அய்யா, “அவருக்கு நீங்க வக்காலத்தா...? அவர் மனதில் பட்டதை அவர் கேட்கட்டும்” என்றார். அனைவருமே சிரித்துவிட்டோம். 

அவர் எங்களுடன் உரையாடிய முழுப்பொழுதும் நகைச்சுவை நிறைந்து காணப்பட்டது. நேரம் போனதே தெரியவில்லை. “சனி நீராடு” என்று ஆத்திச்சூடியில் அவ்வையார் சொல்லியிருக்கிறாரே... அதன் பொருளென்ன?” இது அய்யாவின் கேள்வி. “சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கனும்...” இது எங்கள் விடை. “தவறு! சனி என்பது மிகக் குளிர்ச்சியான கிரகம். சனி நீராடு என்றால், குளிர்ந்த நீரில் குளி என்று பொருள்” - இது அய்யாவின் விளக்கம். முதல் வகுப்பில் படித்த ஆத்திச்சூடிக்கு அன்றுதான் விளக்கம் கிடைத்தது போங்க! “சோம்பித் திரியேல்” என்ற ஆத்திச்சூடிக்கு விளக்கமளித்தார் அய்யா. 

சோம்பலின் அடையாளங்கள் 3 உள்ளனவாம். (1) காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருத்தல் (2) இலக்கற்ற பயணம் (3) தன்னால் கூடுதலாக முடியும் என்ற நிலையிலும் குறைவாக வேலை செய்தல் “இலக்கு நிர்ணயித்து வாழ்ந்தால், நம்மால் பிறர் பயனடைவர்; அவர்களால் நாம் சிதைய மாட்டோம்...

 ஒவ்வொரு பொருளும் அருகிலுள்ள பொருளைப் பாதிக்கும் என்பது பௌதீக விதி” “மனிதனுக்கு பிறந்த நாள் முக்கியமல்ல! அவன் இறக்கும் நாளில் எவ்வாறு இறக்கிறான் என்பதே முக்கியம். அதற்கு அவன் வாழ்நாள் முழுதும் சிந்தித்து செயல்பட வேண்டும்...” “24 மணி நேரத்தைக் கொண்ட ஒரு நாளில், ஓய்வு - உறக்கம் - நம் தேவைகளுக்காக 8 மணி நேரமும், செய்யும் பணிக்காக (அது கல்வி, வேலை எதுவாகவும் இருக்கலாம்) 8 மணி நேரமும் கழிகிறதெனில், எஞ்சிய 8 மணி நேரம் நம்முடையது. 

அதை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு கூட வேண்டாம். வாரத்துக்கு நான்கரை மணி நேரத்தையாவது அதற்கு ஒதுக்கலாம்.” - இவையெல்லாம் அய்யாவின் கருத்துப் பொழிவில் கிடைத்த அருஞ்செய்திகள். கேட்டுக்கொண்டேயிருக்கலாம். நேரம் இடம் தர வேண்டுமே...? “சலிப்பு தட்டினால் சொல்லிடுங்க! நிறுத்திக்கிறேன்...” என்றார் அய்யா. எங்கே சலிப்பு தட்ட...? மதிய உணவு வேளை வந்ததால், உரையை நிறுத்திக்கொண்டார் அய்யா. * * * * * * * * * * * * * * * 

சிறிது நேரத்தில் ஒருவர் வந்து, “நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இன்று சமைக்காத உணவு தரப்படவுள்ளது” என்று கூறிச் சென்றார். “அது என்ன சமைக்காத உணவு...?” அந்நேரத்தில் எங்களுக்குப் புரியவில்லை. வழமை போல 4 பொறுப்பாளர்கள் 5 பாத்திரங்களுடன் காத்திருக்க, நாங்கள் தட்டேந்தி உணவைப் பெற வரிசையில் நின்றோம். 

என் முறை வந்தது. ஒருவர் என் தட்டில் ஒரு வாழைப்பழத்தை வைத்து, நான் கையில் வைத்திருந்த டம்ளரில் - நம்மூரு ‘பாலும் பழமும்’ பானத்தில், கைக்குத்து அவலை ஊறப்போட்டு அவல் பாயசம் தந்தார். துண்டு துண்டாக நறுக்கி, எழுமிச்சைச் சாறில் தோய்த்தெடுத்த சுரைக்காயில் ஒரு கைப்பிடி..

. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் கொண்டு அரைக்கப்பட்ட துவையல் ஒரு விழுது... ஊறப்போட்ட கைக்குத்து அவலுடன் பீட்ரூட், அச்சு வெல்லம் கலந்து இனிப்பு அவல் ஒரு கைப்பிடி... ஊறப்போட்ட கைக்குத்து அவலுடன் துண்டுகளாக்கப்பட்ட கேரட், வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத் தூள் கலந்து கார அவல் ஒரு கைப்பிடி... - இவைதான் சமைக்காத உணவு. “ஐயே... கொஞ்சமாத்தானே இருக்கு...? இது எப்படி நம்ம வயித்தை நிறைக்கும்...?” தட்டில் கை வைக்குமுன் நான் நினைத்தேன் 

.இப்படி. சாப்பிடத் துவங்கி, நிறைவு செய்ய எனக்கு 30 நிமிடங்கள் பிடித்தது. இவற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அரைத்து, சுவைத்துதான் சாப்பிட முடியும். சமைத்த உணவு போல அரைகுறை அரைப்பில் உள்ளே தள்ள முடியாது என்பது புரிந்தது. வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிடச் சொன்னார்கள்... சாப்பிட்டோம். “சரி, டேஸ்ட் எப்படீ”ன்னு கேட்கிறீர்களா...? – ஆகா... என்ன ஒரு சுவை தெரியுமா...? ரசித்து, சுவைத்து சாப்பிட்டு எழுந்தோம்.

 * * * * * * * * * * * * * * * மதியம் 02.30 மணிக்கு, பயிர்களுக்கான பூச்சு விரட்டி செய்து காண்பிக்கப்பட்டது. வழமையாக பயிர்களுக்கு அடிக்கப்படுவதை, ‘பூச்சி மருந்து’ என்று சொல்லக்கூடப் பொறுக்கவில்லை அய்யாவுக்கு. “அத பூச்சி விஷம்ன்னு சொல்லுங்க! மருந்து யாரையாவது சாகடிக்குமா? விஷம்தானேய்யா சாகடிக்கும்...?” என்றார். “ஒடிச்சா பால் வரனும்; 

சுவைத்தால் கசக்கனும்; முகர்ந்தால் நாறனும்” இந்த வரைவிலக்கணப்படி, பப்பாளி, வேம்பு, வேலிகாத்தான் போன்ற மரங்களின் இலைகளைச் சேர்த்து, துண்டு துண்டாக நறுக்கி, மாட்டு சிறுநீருடன் கலந்து ஊற வைத்து காண்பிக்கப்பட்டது. அதைப் பயிர்களுக்குத் தெளித்தால், வழமையான வாசனையை எதிர்பார்த்து அதை உண்ண வரும் பூச்சிகள், வேறு வாசனை வருவதை உணர்ந்து அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடுமாம். இதுதான் பூச்சி விரட்டியின் தத்துவம். 

அதுபோல, பழக்கழிவுகளைக் கொண்டு ‘பழக்காடி’ என்றொரு கரைசல், மீன் கழிவுகளைக் கொண்டு ‘மீன் அமிலம்’, பசு அல்லது ஆட்டின் சாணம் - சிறுநீரைக் கொண்டு, கூடுதலாக நெய், தயிர், வாழைப்பழம் போன்ற பொருட்களைச் சேர்ந்து ‘பஞ்சகாவ்யா’, பசு அல்லது ஆட்டின் சாணம் - சிறுநீரைக் கொண்டு அமிர்த கரைசல், தேங்காய் பால் - புளித்த மோரைக் கொண்டு ‘தேமோர் கரைசல்’ ஆகியன செய்து காண்பிக்கப்பட்டது. 

இவையனைத்தும் பயிர்களுக்கு ஊட்டம் கொடுப்பனவாகவும், தொல்லை தரும் பூச்சிகளை விரட்டுவனவாகவும் செயல்படுமாம். பயிர்களுக்கு இடுபொருள் இடுதல், பஞ்சகாவ்யா தயாரித்து தெளித்தல், சவுக்கு விளைச்சல் செய்தல், வட்டப்பாத்தி அமைத்து பல்வேறு செடிகளுக்கான விதைகளை நட்டல், மழைநீரை பயிர்களுக்காக எளிய முறையில் சேகரித்தல் உள்ளிட்டவற்றைக் கொண்டு, மதிய உணவுக்கு முன்பு 3 செயல்திட்டம், மாலை 04.30 மணிக்கு 3 செயல்திட்டம் என மொத்தம் 6 செயல்திட்டங்களை, பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலுடன் பயிர் வளர்ந்த இடங்களில் பங்கேற்பாளாராகிய நாங்கள் நேரடியாகச் சென்று செய்தோம். 

இதில் ஒரு வேடிக்கையும் உண்டு. இந்த செயல்திட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்வதற்காக பங்கேற்பாளர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். வட்டமாக அமர்ந்திருந்த எங்களை 1 முதல் 6 வரை அடுத்தடுத்து சொல்லச் சொல்லி, 1 சொன்னவர்கள் தனியாக, 2 சொன்னவர்கள் தனியாக என அனைவரும் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். 

“இதிலென்ன வேடிக்கை?” நான் இன்னும் சொல்லவேயில்லை. நான் 1ஆம் எண் குழுவில் இருந்தேன். நமதூரைச் சேர்ந்த மற்ற மூவரும், அய்யாவின் இந்த எண் தந்திரத்தில் வெவ்வேறு குழுக்களில் பிரிக்கப்பட்டனர். ‘மெகா’ நூஹ் காக்கா 5ஆம் எண் குழுவிலிருந்தார். அக்குழுவின் பொறுப்பாளர், அவர்களனைவரையும் ‘பஞ்சகாவ்யா’ செய்ய அழைத்தார். 

“இன்னாலில்லாஹி... மாட்டு மூத்திரத்தில் கை வைக்கச் சொல்றாங்களே...” என்று நினைத்த ‘மெகா’ நூஹ் காக்கா, நைஸாக எனது 1ஆம் நம்பர் குழுவில் வந்து இணைந்துகொண்டார். தனது புத்திசாலித்தனத்தை என்னிடம் மகிழ்ச்சியாக அவர் சொன்னபோது, “காக்கா, இந்த 6 குழுவினரும் சுழற்சி முறையில் 6 செயல்திட்டங்களையும் செய்தேயாகனும்... நாங்க இப்ப இரண்டாவது செயல்திட்டத்தில் இருக்கிறோம்... 

அடுத்து, நீங்க ஆசைப்பட்ட பஞ்சகாவ்யாதான்...” என்றேன். அப்போது அவர் அசடு வழிந்ததைக் காண நூறு கண்கள் வேண்டும்... செயல்திட்டங்களை நிறைவு செய்த பின்னர், மருந்தடிக்காமல்... ஓ மன்னிக்கனும்! விஷமடிக்காமல் விளைவிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு – அதாங்க... நம்மூரு ஏழல கிழங்கு ஓர் அகன்ற பாத்திரம் நிறைய வைக்கப்பட்டிருந்தது. மூலிகைத் தேனீரை அருந்தியவாறு கிழங்குகளை விரும்பிய மட்டிலும் சாப்பிட்டு மகிழ்ந்தோம். ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு...? மறுநாள் காலையில் அந்தக் கிழங்குப் பாத்திரத்தில் கைவிட்டேன்... அதே கிழங்கு... அதே ருசி! 

பிசுபிசுப்பு எதுவுமேயில்லை. நான் சாப்பிடுவதைப் பார்த்து இன்னும் இரண்டு பேர் பாத்திரத்திற்குள் கை விட்டனர். காலையில் இதுகுறித்து அய்யா பேசுகையில், “அய்யா இந்த கிழங்கு சாப்பிட்டீங்களே... சுவையா இருந்திச்சா...? இப்ப கூட அதை நேற்று போலவே சாப்பிடலாம்... பிசுபிசுப்பே இருக்காது அய்யா... அந்த பிசுபிசுப்பிற்குக் காரணமே பூச்சி விஷம்தான். நம்மளது இயற்கை விவசாயத்தில் வந்ததல்லவா? தைரியமா சாப்பிடுங்க...” என்றார். இப்படிச் சொன்னதுதான் தாமதம்... அனைவரும் ஆளுக்கொரு துண்டு எடுத்து சாப்பிடத் துவங்கிவிட்டனர்.

 * * * * * * * * * * * * * * * இப்படியாக இரவு எங்களை வந்தடைந்தது... குடிலுக்கு வெளியே நிலவொளியில் அய்யா நாற்காலியில் அமர்ந்தார். அனைவரும் தரையில் பாய் விரித்து அமர்ந்து கதை கேட்டோம்... பேசினார்... பேசினார்... நிறைய தகவல்களைச் சொன்னார்... இம்முறை, விவசாயத்தையும் தாண்டி அய்யாவிடம், இலங்கை தமிழர் பிரச்சினை, உலக பயங்கரவாதம், குறைந்த செலவில் நிறைவான வாழ்வு, அய்யாவின் தன் சரிதம் என பலவற்றைப் பற்றியும் கேள்விகளை எழுப்பினோம்... 

அழகாகவும், எளிமையாகவும் அவர் விளக்கமளித்த பாங்கு - கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதம் குறித்து பாடம் நடத்துவது போலிருந்தது. கூடவே அய்யாவின், ஆங்கிலப் புலமை, உலக - தேசிய - மாநில அரசியல் அறிவு, அறிவியல் அம்சங்களில் தெளிவான பார்வை, இயற்கை விவசாயத்திற்கு இலக்கணம், நகைச்சுவை உணர்வு, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா – கர்மவீரர் காமராசர் - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என பல புகழ்பெற்றவர்களின் குரல்களைப் போல் பலகுரலில் பேசி எங்கள் கவனத்தை முழுமையாக ஈர்த்தது என பல அம்சங்கள் அவரது பேச்சில் வெளிப்பட்டது. நம்மாழ்வார் அய்யாவுடன் உரையாடுகையில் இயற்கை வேளாண்மையின் பரவலுக்காக இந்த முதிய வயதில் தனது குடும்ப வாழ்வை அர்ப்பணித்ததை மிகவும் சாதாரணமாகவும், மேலோட்டமாகவும் சொல்லிக் கடந்து சென்றார். 

“அய்யா! குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கவில்லையா?“ எனக் கேட்கப்பட்டதற்கு, “மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டேன்... மனைவிக்கு எனது பொது வாழ்வு பிடிக்கவில்லை... அதனால் இந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் வரவில்லை... ஒன்றை அடைய வேண்டுமானால் ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும்... எனக்கு நாடு முழுக்க குடும்பங்களும் உறவுகளும் இருக்கின்றன“ என அவர் சொல்லி முடிக்கும்போது எங்கள் கண்கள் பணித்தன. 

நம்ம ஊரில் உள்ள புற்றுநோய் பரவல் தொடர்பாக அய்யாவிடம் கேட்டோம். “மனித உடல் இயற்கையாகவே அதன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கிறது... அனைவரின் உடம்பிலும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியும் உள்ளது... அது வரையறுக்கப்பட்ட அளவுக்கு இருப்பது தேவையான ஒன்றே... அளவு கூடினால்தான் அது புற்றுநோயில் போய் முடிகிறது... நமது உடல் மாசடைவதே புற்று நோய்க் கிருமியின் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம்... நீர், நிலம், காற்று அனைத்தும் மாசுபட்டுள்ளது... அவற்றைத்தான் நாம் உள்வாங்குகிறோம்...

 பற்றாக்குறைக்கு, நாம் உண்ணும் உணவும் இன்று விஷமில்லாத ஒன்றைக் காண்பதே அரிது என்றாகிவிட்ட பிறகு, இந்த மாசு எல்லாம் சேர்ந்துதானய்யா அந்த புற்றுநோய்க் கிருமிக்கு தீனி போடுது...” என்றார். புற்றுநோயை இயற்கை முறையில் குணமாக்க வாய்ப்புண்டா என இயற்கை உணவியல் நிபுணர் மாறன்ஜியிடம் கேட்டபோது, “அவங்க இயற்கை உணவுக்கு முழுமையாக மாறனும்... புற்றுநோய்க் கிருமிகளுக்கு இயற்கை உணவில் எந்தத் தீனியும் கிடைக்காது என்பதால் அவை செத்துப் போகும்... கீமோ கொடுத்தாச்சா...?” என்று கேட்டார்.

 “கொடுக்கப்பட்டவர்களும் உண்டு; கொடுக்கப்படாதவர்களும் உண்டு” என்றோம். கொடுக்கப்பட்டவர்களின் உடம்பு ஏற்கனவே நாசப்படுத்தப்பட்டுவிட்டது... அந்த உடம்பில் இயற்கை உணவு வேலை செய்ய பெரும்பாடு படும்... முயற்சிக்கலாம்! இதுவரை கீமோ கொடுக்கப்படவில்லையெனில், அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட இசைந்தால், இயற்கை உணவைக் கொண்டே குணப்படுத்த முடியும்” என்றார் 

நம்பிக்கையூட்டும் விதமாக! * * * * * * * * * * * * * * * இவ்வாறாக இரண்டாம் நாள் இரவு எங்களிடமிருந்து விடைபெற்று, 14.11.2013 வியாழக்கிழமையன்று மூன்றாம் நாள் விடிந்தது... சிற்சில செயல்திட்டங்களும், யோகா – மன வலிமைக்கான செய்முறைப் பயிற்சிகளும் - அவற்றுக்கென வந்திருந்த நிபுணர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. பயிர்கள் வளர்ந்துள்ள பகுதிகளுக்குச் சென்று, அவற்றின் மீது இருக்கும் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வருமாறு பணிக்கப்பட்ட நாங்கள், காலை 07.00 மணியளவில் உற்சாகமாக வெளியிறங்கினோம் 

- பூச்சி பிடிக்க. இலைகளின் மீது அமர்ந்தும், இலைகளைச் சுருட்டித் தனக்குப் போர்வையாக்கிக் கொண்டும், கிளைகளின் மீது தவழ்ந்தும், வேர்களையொட்டியும் அலைந்து திரிந்த பல வகையிலான பல வண்ணப் பூச்சிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்தோம். கடைசி வரை பிடி தராத தட்டாம்பூச்சியை (அதாங்க... நம்மூரு தும்பியை) இளைஞர்கள் பறந்து பறந்து பிடிக்க முயற்சித்து, இயலாமல் மண்ணைக் கவ்விய காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. நிறைவில், பிடிபட்ட பூச்சிகளைக் கொண்டு ஒரு செயல்திட்ட அறிக்கையை தயாரித்து, வானகம் நடுவ பொறுப்பாளர்களிடம் சமர்ப்பித்தோம். 

முகாமில் கடந்த இரண்டு நாட்களாக ஓரளவுக்கே பழகியிருந்த நாங்கள், இந்த பூச்சி வேட்டையின் மூலம் நெருங்கிய நண்பர்களானோம். ஆம்! பல ஊர்களிலிருந்தும் இன்று எங்களுக்கு ஏராளமான பசுமைத் தோழர்கள் உள்ளனர். நிறைவாக, அய்யா குடிலுக்கு வந்தமர்ந்தார். “இந்த 3 நாட்கள்ல நீங்க பெற்ற பட்டறிவு குறித்து ஒரு பத்து பேரு சொல்லுங்கய்யா...” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கருத்துக்களைக் கூறினோம். அய்யா கேட்டுக்கொண்டதோ பத்து பேரை மட்டும் பேச! பேசியதோ 20 பேர் வரை!! 

அனைவருமே இந்த முகாம் தங்களுக்கு இயற்கை விவசாயம் - எளிய வாழ்க்கை முறை குறித்து மிகுந்த ஆர்வத்தையும், வேகத்தையுமே ஏற்படுத்தியுள்ளதாகவும், விஷம் கலந்த அனைத்தின் மீதும் அளவிட முடியாத வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆதங்கத்துடன் கூறக்கேட்ட அய்யா, அனைவருக்கும் சில அறிவுரைகளை வழங்கினார். 

அந்தக் கலந்துரையாடலில் தமிழகம் முழுக்க இயற்கை வேளாண்மையின் பக்கம் மக்கள் திரும்புவதற்கான ஏராளமான சான்றுகள் தென்பட்டன. தஞ்சையில் வேளாண்மை உள்ளிட்ட வாழ்வியல் கல்விகளை கற்பிக்கும் பல்முனைக் கழகம் (multiversity) உட்பட சில நிறுவனங்கள் தொடங்க உள்ளதாகவும் அய்யா தெரிவித்தார். வானகத்தில் இயற்கை வேளாண்மையைக் கற்று - பின்பற்றி - பரப்பிடும் நோக்கில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பணியாற்றும் பட்டதாரிகளையும், விவசாயிகளையும் அங்கே காண முடிந்தது. 

அய்யா நம்மாழ்வார் தன் வாழ்நாள் இலக்கை எட்டிவிட்டதாகவே எங்களுக்குப் பட்டது. வானகம் நடுவத்தில் அரைபட்ட - மிதிபட்ட வைக்கோல்களும், மர இலை - கிளைகளும் சிதறிக் கிடந்தன. அய்யாவின் போராட்டப் பயணத்தில், மிதிபட்ட அவை - நுகர்வு வெறி, லாப வெறி, கார்ப்பரேட் பண்பாடு, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் சருகுகளாகவே கண்களுக்கு தென்பட்டன. முகாமில் பங்கேற்ற எங்கள் அனைவருக்கும் அய்யா தன் கைச்சான்றிட்ட சான்றிதழ்களை வழங்கினார். 

பங்கேற்பாளர் அனைவரின் சார்பிலும் ஐயாவுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தியதோடு, வானகம் நடுவ வளர்ச்சிக்காக எங்கள் சிறிய நன்கொடையையும் கையளித்தோம். பின்னர், அனைவரும் ஆவல் தீருமளவுக்கு அய்யாவுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டோம். உங்களுக்கு கண்டிப்பா ஒரு விஷயத்தை சொல்லியே ஆகனும்... முதல் நாளிரவில் “பக்கத்து ஊர்ல ரூம் போட்டு தங்குவோம்” என்று சொன்ன என்.எஸ்.இ. மாமா இரண்டாம் நாளிலிருந்து, முகாம் நிறைவு வரை அவ்வாறு சொல்லவே இல்லை என்பது மட்டுமின்றி, எங்களோடு இணைந்து முகாமில் முழுமையாக ஒன்றிப் போனார். 

அடுத்த நாளுக்கு என்ன செய்வது என்ற திட்டங்கள்தான் அவர் என்னிடம் பேசும்போது வெளிப்பட்டது. “ஓ... மாமா இந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள் போலும்!” எனக்குள் நினைத்துக் கொண்டேன். * * * * * * * * * * * * * * * மதிய உணவுண்டோம்... பெட்டியைக் கட்டினோம்.. காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த – இயற்கை விவசாயம், எளிய வாழ்க்கை முறை, நோயற்ற வாழ்வு, சுவையான இயற்கை உணவு, சமையல் குறிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளிலான அருமையான நூற்களையும், பூச்சிக்கொல்லி விஷம் கலக்காமல் விளைந்த தினை, சாமை, குதிரைவாலி, வரகரிசி போன்ற சிறு தானியங்களையும் பணம் கொடுத்து வாங்கி வைத்துக்கொண்டோம். 

அனைவரும் இணைந்து குடிலை விட்டும் விடைபெற்றோம். தெரியுமா உங்களுக்கு...? நேற்று மதியம் என் வீட்டில் சமைக்காத உணவுண்டோம். சோற்றுக் கற்றாழையை உடல் முழுக்கத் தேய்த்துக் குளிக்கிறோம்... அப்பாபள்ளி கோட்டைக்குள் நிற்கும் ஆலமரத்தின் விழுதுகளை வெட்டியெடுத்து, அதைக்கொண்டு பல் துலக்குகிறோம்... எங்கள் வீட்டில் சேரும் குப்பை எனும் உரச் சொத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம். இந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட நான் செய்யவில்லையெனில், மூன்று நாட்கள் அங்கிருந்ததில் பயன் என்ன இருக்கப்போகிறது...?

Tuesday, November 26, 2013

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளுடைய பெற்றோரா நீங்கள்???

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளுடைய பெற்றோரா நீங்கள்??? இஸ்லாம் சொல்லக்கூடிய முறைப்படி உங்கள் பிள்ளைகளை நல்ல குணத்துடன் இறையச்சத்துடன் வளர்க்க விரும்புகிறிர்களா?

இதோ உங்கள் கவனத்திற்கு.........

பிள்ளைகள் இறைவன் உங்களுக்கு கொடுத்த அமானிதச் சொத்து.
அவர்களை நன்முறையில் ஒழுக்கத்துடன் வளர்ப்பது உங்கள் மீது கடமை.

ஆண் பெண் பிள்ளைகளுக்கு தொழுவதையும் குர்ஆன் ஓதுவதையும் மார்க்க கல்வி கற்றுக் கொடுப்பதையும் தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தினமும் பள்ளிவாசலுக்கு காலை,மாலை குர் ஆன் கிளாசிற்கும்,ஜும்ஆ தொழுகைக்கும் மார்க்க உபதேசம் பெறவும்  வாரம் ஒருமுறையாவது உங்கள் பிள்ளைகளை ஈமானிய உணர்வுகளை புதுப்பித்து கொள்ள பள்ளிவாசல் அல்லது மதரசா வுக்கு அனுப்பவும்.

உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே 
ஏகத்துவத்தை பற்றியும்,
தொழுகையின் அவசியம்,
பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
முதியோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
இரத்த பந்த உறவினர்களுக்குரிய கடமைகள்,
நல்ல நண்பணின் தகுதி எவை?எவை?
மரணம்,மறுமை,சொர்க்கம்,நரகம்
என எல்லாவற்றையும் தாயும்,தகப்பனும் சொல்லிக்கொடுக்கும்போதுதான் அதன்படி பெற்றோர்கள் நடந்து காட்டும்போதுதான் நல்ல ஒழுக்கத்தின் விதை அங்கே விதைக்கப்படும்.

நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் புத்தகங்கள்,குர் ஆன்,ஹதிஸ்,கிதாபுகளை உங்கள் பிள்ளைகளுக்கு பரிசாக கொடுங்கள்.
நம் இல்லம் முழுவதும் இஸ்லாம் சொல்லக்கூடிய முறையில் இருந்தால் கண்டிப்பாக நம்மால் இஸ்லாம் கூறும் நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியும்.

உங்கள் ஆண் பெண் பிள்ளைகளை கோ எஜுகேஷனல் கலந்து படிப்பதை தவிர்க்கவும்.ஆணும் பெண்ணும் கலந்து படிக்கும் பள்ளி கல்லூரிகளே வழிகேட்டின் பிறப்பிடம் ஆகும்.

பெண் பிள்ளைகளை பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி கல்லூரிகளிலும்,
ஆண் பிள்ளைகளை ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி கல்லூரிகளிலும் படிக்க அனுப்பவும்.

நல்ல நண்பர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள மட்டும் அனுமதியுங்கள்.
பிள்ளைகளை வழிகெடுவதற்கு கெட்டநட்புகளும் முக்கிய காரணம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆரோக்கியமான முறையில் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்.எதற்கெடுத்தாலும் படி படி என மிரட்டாமல் பிள்ளைகளை மார்க் வாங்கும் மிசின் போல நடத்தாமல் மென்மையான முறையில் நடத்த வேண்டும்

பிள்ளைகளின் அறிவுத்திறமை உட்பட எல்லாமே விதியின் 
படியே நடைபெறும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...
ஒவ்வொரு காரியமும்,விதியில் எழுதப்பட்டுவிட்டது.
மனிதனின் விளக்கமற்ற தன்மையும்,இயலாத்தன்மையும்,
புத்திசாலித்தனமும்,திறமை பெற்றிருப்பது உள்பட எல்லாம் விதிப்படியே நடைபெறுகின்றன.
முஸ்லிம்

டியூசன் அனுப்புவதாக இருந்தாலும் பெண் பிள்ளைகளை 
ஆசிரியையிடமே அனுப்புங்கள்.

படிக்கும் பிள்ளைகளுக்கு தேவையில்லாத செல்போன்,இன்டர்நெட்,
சினிமா சிடிக்கள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

செல்போனில் சினிமா பாட்டுகளை பொழுதன்றும் கேட்பது மரண சிந்தனையும்,மறுமை சிந்தனையையும் மழுங்கடித்து கனவு 
வாழ்க்கையிலே மிதக்க வைத்து தவறான ஒழுக்கத்தை தானே
வரவழைக்கும்

பிள்ளைகளிடம் தேவையின்றி கையில் பணம் காசு கொடுக்காதீர்கள்.
அதிகமாக பணம் புழங்குவது தவறான வழியில் செலவளிக்க சொல்லும்.

பருவ வயதை அடைந்த பெண் பிள்ளைகளுக்கு ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்குங்கள்.ஹிஜாபை சரியானமுறையில் அணிய பழக்கப்படுத்துங்கள்.ஹிஜாப் மற்றும் ஜூம் ஆ தொழுகைக்கு அனுமதிக்காத பள்ளிக்கூடங்களில் உங்களின் உரிமையை தட்டி கேளுங்கள்.அப்படியும் அனுமதிக்காத பட்சத்தில் அப்படிப்பட்ட கல்விநிலையத்தை விட அனுமதிக்கும் கல்வி நிலையத்திலேயே படிக்க வையுங்கள்.

மார்க்க கல்வி பெற்ற பிள்ளைதான் தாய் தந்தையரை சரியான முறையில் மதித்து நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக சமுதாயத்தில் மிளிரமுடியும்.

இல்லையெனில் உலகக் கல்வி மட்டும் பெறும் பிள்ளைகள் நிறைய சம்பாதிக்க மட்டும் செய்து பெற்றோரை சுற்றத்தாரை மதிக்காத வறட்டு மனிதர்களாகத்தான் உருவாக முடியும்.

மார்க்கக் கல்வி மட்டும் தான் இவ்வுலகிலும்,மறு உலகிலும் வெற்றியடைய வைக்கும்.நம் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்து முன் மாதிரி முஸ்லிமாக ஜொலிக்க வைக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.

Sunday, November 24, 2013

பல்லில் இரத்தக்கசிவா....???

அந்தக்காலத்தில் 30,40 வயதைத் தாண்டியவர்கள் தான் ஊருக்கு ஒன்று இருக்கும் பல் கிளினிக்கிற்கு பல் சொத்தை என சொல்வார்கள்...
ஆனால்,இப்பொழுது ஐந்து வயது பிள்ளைகளுக்கு ஆறு பல் சொத்தை  என வொயிட் சிமெண்டால் அடைக்கிறார்கள்

பல் சொத்தை,பல் வலி,பல் கூச்சம்,பல்லில் இரத்தம் வடிதல் போன்றவை நூற்றுக்கு 80% பேருக்கு இருக்கும் பிரச்சினைகள் ஆகும்.

வீதிக்கு வீதி முளைத்துவிட்ட டெண்டல் கிளினிக்கில் கூட்டம் தான் அலைமோதுகிறது...

திடீர் திடீர் என புது புது பிராண்டுகளில் பற்பசைகள் அறிமுகமாகியும் பற்சொத்தைக்கும்,பல்லில் இரத்தல் வடிதலுக்கும் சரியான தீர்வு கிடைத்த பாடில்லை...

விதவித மான டிசைன்களில் வரும் பிரஷ்களும் எந்நோயையும் தீர்த்தபாடில்லை.

மக்களின் நாக்கு ருசியை அறிந்து கொண்ட வியாபாரிகள் இனிப்பு வகைகளில் பலவித கெமிக்கலை கொட்டி அதற்கு அடிமையாக்கிவிட்டனர்...
                                                   
வீதியெங்கும் ஐஸ்கிரீம் கடைகள்,எல்லாக்கடைகளிலும் உயர் ரக சாக்லேட்டுகள்,கண்ணைப்பறிக்கும் நாவில் நீர் ஊற வைக்கும் ஸ்வீட்,கேக் வகைகள்,கிரீம் பிஸ்கட்டுகள் என என கண்ணில் படும் இடமெல்லாம் ஆக்கிரமித்துள்ளது...

பிள்ளைகள் அடம்பிடிக்கும் என வாங்க்கிக்கொடுக்கும் நாம் நம் வாயில் ரெண்டை எடுத்துப்போட்டுக்கொள்வோம்...

சரியான மருத்துவம் என்பது வரும் முன் காப்பது ஆகும்...அதாவது எந்த ஒரு பொருளை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஆனால்,நம்மில் அதிகமானோர் அவ்வாறு செய்யாமல் பொடுபோக்காக இருந்துவிட்டு பின்னர் ஆங்கில மருத்துவமனையில் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு பல் பிடுங்க வரிசையில் காத்திருப்போம்....

வாயில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்கி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது..

இதற்கு அழகிய வழிகாட்டுகிறார்கள் அண்ணலார் நபிகள் நாயகம் ஸல்


இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, 'இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது' என்று கூறினார்கள்.
புகாரி 5609

சுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக்காகப்) புறப்பட்டேன். அவர்கள் 'ஸஹ்பா' எனுமிடத்தில் - இதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதே - இருந்தபோது அஸர் தொழுகையைத் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு மாவு மட்டுமே) கொடுக்கப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பிறகு (அனைவரும் சேர்ந்து) தொழுதோம். 
புகாரி.2981

இன்னும் பல்லில் இரத்தம் வடிதலுக்கு இயற்கையான மருத்துவமுறை ஒன்று உள்ளது...அதனால் இயற்கை முறையிலேயே எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் பல் சுத்தம் செய்யப்படும்...

அதுதான் ஆயில் புல்லிங்...

வெறும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மூலம் வாய் கொப்பளிப்பதினால் வாய் சுத்தம்,பல்லில் இரத்தம் வடிதல்,ஜலதோசம்,மலச்சிக்கல்,தூக்கமின்மை போன்ற வியாதிகள் குணமடைகிறது என ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது....

விருதுநகர்: ஆயில் புல்லிங் என்ற முறையின் மூலம் பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவத்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ஷரத் அசோகனுக்கு 'குழந்தைகள் பல்மருத்துவ ஆராய்ச்சி விருது' மற்றும் 'ஆரோக்கிய மேன்மை விருது'கள் வழங்கப்பட்டன.
இந்த லிங்க்கில் படிக்கலாம்
http://tamil.oneindia.in/news/2012/06/06/business-dr-sharat-asokan-honoured-155168.html
கெமிக்கல் கொட்டப்பட்ட பற்பசையை விட பழமையான முறையில் தயாரிக்கப்படும் பல்பொடிகளும்,பற்பசைகளும் மிகச்சிறந்தது.

பற்பொடி..

அந்த காலத்தில் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கருவேலங்குச்சி, உப்பு, சாம்பல் போன்ற பக்க விளைவு இல்லாத இயற்கையான பொருட்களை உபோயோகித்து பல் தேய்த்து வந்தார்கள்.... இதனால் பல் சொத்தை, வலி, சிறிய வயதிலே பற்களை இழத்தல், வாய்துர்நாற்றம், போன்ற எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் இயற்கையான பற்களுடன்....

ஆனால் இப்போது நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்களில் நிகோடின் அதிக அளவில் உள்ளது என்று வெளிட்டு நம்மை பீதியடைய வைத்தார்கள்....

இதிலிருந்து விடுபட ரொம்பவும் எளிமையான வழி ஒன்று உள்ளது ...முயற்சி செய்து பாருங்கள்...
வேப்பிலை – நாலு பிடி
கல் உப்பு - ஒரு பிடி

இரண்டையும் மண்சட்டியில் இட்டு வறுத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால்..... வேப்பிலையும், கல் உப்பும் பல்லுக்கு வரும் பல நோய்களைத் தடுக்கும்....இருக்கும் வியாதிகளையும் போக்கும் .....

Wednesday, November 13, 2013

கருப்பு தக்காளி,கலர் கேரட்???

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கனகாம்பரம்,ஒரு கிலோ எடை உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொய்யா,இயல்பான தோற்றத்தைக்காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்க்கும் சவுக்கு மரங்களை தமிழக விவசாயி கண்டுபிடித்துள்ளார் என தூக்கி வைத்துக்கொண்டாடும் ஊடகங்களுக்கு அறிவே இல்லையா....???

இயற்கைக்கு மாற்றாக மலட்டு பிராய்லர் கோழிகள்,மலட்டு பிராய்லர் முட்டைகள் தீமையானவை என கூவுகிறார்கள்...பிடி கத்தரிக்காயை வசைமாறி பொழிகிறார்கள்...ஆனால்,தமிழக விவசாயிக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததை பெருமையாக குறிப்பிடுகிறார்கள்...!!!

மரபணு மாற்றுவதை விட்டு விட்டு மரபுவழி வாழ்க்கையை வாழ்வோம்.
பேராசையின் தொடக்கமே அடுத்தவனை அழித்து தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பதேயாகும்.

இதோ அடுத்து வரவுள்ள  கருப்பு தக்காளி,கலர்புல் கேரட்...

                             
                                                               

Saturday, November 9, 2013

எவரும் செய்யலாம் ஏற்றுமதி-பாகம் 2

யார் அதிகமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்களோ,அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்.இது இன்று எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.என்றாலும் இது வணிகத்துறையில் அப்பட்டமாக வெளியே தெரியும் உண்மை.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என விடாமுயற்சியோடு போராடுபவர்கள் வெற்றிக்கனியை பறிப்பது மிக எளிது...

அப்படி இளம்வயதில் ஏற்றுமதி உலகில் நுழைந்த கவுதம் தன் வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார்

சந்தித்தோம்...சாதித்தோம்....

என் பெயர் கவுதம்.வயது23.கல்லூரியில் படித்து முடித்தபின் சொந்த ஊரான திருச்சியில் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்ற என்கிற எண்ணத்தில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.

பாலைவனத்தில் தண்ணீர் தேடுபவனுக்கு சுனை நீர் கிடைத்தது போல புதிய தலைமுறை பத்திரிக்கையை கடையில் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வாங்கிப்படித்தேன்.

வாரா வாரம் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறையில் எவரும் செய்யலாம் ஏற்றுமதி என்கிற தொடர் வெளிவரப்போகின்றது என்ற அறிவிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.

ஏற்றுமதி பற்றி யோசித்துக்கொண்டிருந்த எனக்கு,நீயும் ஏற்றுமதியாளனாக மாற முடியும் எனக்கூறுவது போல் அமைந்திருந்தது அந்த அறிவிப்பு.

தொடர் ஆரம்பித்தது முதல் முடியும்வரை எனக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே வந்தது.அதிலிருந்த வழிகாட்டுதலின்படி வெறும் 250ரூபாய் செலவிலேயே எனது ஏற்றுமதி நிறுவனத்திற்கான அரசின் அனுமதியைப்பெற்றுவிட்டேன்.இந்த அனுமதியைப்பெற்றுத்தர சில ஏற்றுமதி ஆலோசகர்கள் பத்தாயிரம் ருபாய் வரை கேட்கிறார்கள்.

நான் மட்டும் அல்ல.எனது நண்பன் அசோக்கும் இப்போது ஏற்றுமதியாளராக விரும்பி என்னோடு சேர்ந்து பணியாற்றி வருகிறார்.இருவரும் நேரில் சென்று அவர்களை சந்தித்தோம்.

அவரது வழிகாட்டுதலின்படி முதல் ஏற்றுமதி ஆர்டர் துபாய் நாட்டிலிருந்து எங்களுக்கு கிடைத்தது.அவர் கொடுத்த குறுந்தகட்டில் இருந்துதான் அந்த இறக்குமதியாளரின் முகவரி எங்களுக்கு கிடைத்தது.இப்போது வாரந்தோறும் திருச்சியில் இருந்து காய்கறிகளை துபாய்க்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

எங்களது ஆர்வத்தையும்,வேகத்தையும் பார்த்த துபாய் நாட்டுக்காரர் இப்போது ஆர்டரை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகப்படுத்தி நிறைய காய்கறிகளை தொடர்ந்து எங்களிடம் வாங்கி வருகிறார்.

அரிதாசன் அவர்களிடம் அடிக்கடி எங்கெங்கு BYER SELLER BEET  நடக்கின்றன போன்ற விவரங்களை அவ்வப்போது கேட்டுத்தெரிந்துகொள்வோம்.சமீபத்தில் சென்னையில் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் நடத்திய வர்த்தக கண்காட்சி நடைபெறுவதாகக் கூறியதைக்கேட்டு அங்கு சென்றோம்.
                                                                 

அவர் கூறியபடியே அன்றைய நாள் முழுவதும் கண்காட்சி உள்ளேயே இருந்தோம்.எங்களைப்பற்றி எல்லாரிடமும் அறிமுகம் செய்து கொண்டோம்.எங்கள் ஆர்வத்தையும்,நாங்கள் பேசிய விவரங்களையும் கேட்ட தாய்லாந்து நாட்டு இறக்குமதியாளர் ஒருவர்,இப்போது மாதம் 2000கிலோ ஏலக்காய் அனுப்பச் சொல்லி ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
ரொம்பவும் மகிழ்வாய் இருக்கிறோம்.

                                                                                              அன்புடன்
                                                                                 கவுதம்  மற்றும் அசோக்
                                                                                ரெயின் டிராப் இண்டர்நேசனல்,
                                                                                  திருச்சி.செல்:9688338881
எவரும் செய்யலாம் ஏற்றுமதி-பாகம் 1
http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_25.html

தொடர்புக்கு;
ஏற்றுமதி வழிகாட்டியாளர்
வீ.அரிதாசன்
94441 46807

Friday, November 8, 2013

சிக்கன் எமன்....???

சிறுநீரகங்களில்,கல்லீரலில் கேன்சர்

ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு

கொழுப்பு நிறைந்த ஈரல் நோய்,ஹார்மோன் பிரச்சினைகள்

 ஈசியாக வரவேண்டுமா...???


மரபுவழி மருத்துவ முறைகளால் நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை ஊருக்கு உரைக்கும் நமது பயணத்தில், எண்ணற்றோர் இணைந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி. இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் அவர்களும் இப்பயணத்திற்கு தமது ஆதரவை நல்கியுள்ளார்.

குறிப்பாக, ‘இனிப்பு’ ஆவணப்படத்தில் அவர் மிக முக்கியமான பங்கேற்பு ஒன்றினைச் செய்ய உள்ளார். அது என்ன என்பது படம் முடியும் வரைக்கும் கமுக்கமாகவே இருக்கட்டும்.
                                                                 

கடந்த 2001 ஆம் ஆண்டு நான் குமுதம் இதழில் பணியாற்றியபோது, ’பிராய்லர் சிக்கன்’ கறியை உண்பதனால் விளையும் தீங்குகளைப் பற்றி எழுதினேன். ‘சிக்கன் எமன்’ எனும் தலைப்பில் அக்கட்டுரை குமுதம் இதழின் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. இக்கட்டுரைக்கு எதிராக, கோழிப் பண்ணை உரிமையாளர்கள், அலோபதி கால்நடை மற்றும் மனித மருத்துவர்கள் பொங்கி எழுந்தனர். கோழிப்பண்ணை அமைப்பினர், அலோபதி மருத்துவர்களின் புகைப்படங்களுடன் ‘சிக்கன் உண்ண உகந்தது. இதில் புரதம் உள்ளது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்தனர். சன் தொலைக்காட்சி இதுகுறித்து ‘சிறப்பு நிகழ்ச்சி’ ஒளிபரப்பியது.

என்னுடைய வீட்டு தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டறிந்த எதிர்ப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தனர்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சம் எங்கள் குழுவினருக்கு இருந்தது. ஒரே வாரத்தில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் கோழிப் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

எனது கட்டுரையை ஆதரித்துப் பேசும் வல்லுனர்களை உடனடியாகத் தேடி அவர்களது உதவியைப் பெற்றாக வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு காட்டிய திரு.சைதை துரைசாமி (தற்போதைய மேதகு சென்னை மேயர்), இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் ஆகிய இருவரும் அந்தக் கட்டுரைக்குத் துணை நிற்கச் சம்மதித்தனர். இவர்கள் இருவரும் தங்கள் கட்டுரைகளை விரிவாக எழுதிக் கொடுத்தனர்.


’சிக்கன் எமன்’ கட்டுரையின் எதிர்வினை மட்டுமே நான்கு பக்கங்களில் வெளியானது. இதனால், சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவியலாத நிலை எதிரிகளுக்கு ஏற்பட்டது.

பிராய்லர் சிக்கன் உண்பது தீங்கானது எனும் உண்மை இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதை முதன் முதலில் ஒரு பெரும் ஊடகம் கூறியபோது, ‘அறிவியலுக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது’ என்றெல்லாம் அதை எதிர்த்தவர்கள்தான் அலோபதிக்காரர்கள். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பதில் கூட நியாயம் இருகிறது. அவர்களது தொழிலுக்கு ஆபத்து எனும் எண்ணத்தில் அவர்கள் எதிர்த்தார்கள்.
ஆனால், மக்கள் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அலோபதிக்காரர்கள் பிராய்லர் சிக்கன் விளம்பரங்களில் தங்கள் முகங்களைக் காட்டி பரப்புரை செய்தனர்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்களுக்கு பிராய்லர் மீது எச்சரிக்கை மனநிலை வந்துள்ளது. நாட்டுக் கோழி வளர்ப்பு பெருகத் துவங்கிவிட்டது. தமிழக கால்நடைத்துறை நாட்டுக் கோழி வளர்ப்பிற்கு கணிசமான மானியத் தொகையை வழங்கி வருகிறது.


சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோய்க்கும் அலோபதி தீர்வாகாது என்று மக்கள் புரிந்துகொள்ளும் நிலையும் வ்ரைவில் உருவாக வேண்டும் என்பதே நம் விருப்பம். அந்த விருப்பத்தின் பயணத்தில் நம்மாழ்வார் அவர்கள் நெடுங்காலமாக இருக்கிறார்.
உண்மையில் அவரது பயணத்தில் நான் இணைந்துள்ளேன்; நாம் இணைந்துள்ளோம்.

நம்மாழ்வார் ஐயாவுக்கும் அவரது அடியொற்றி வாழ்வியலை வகுத்துக்கொண்டுள்ள இயற்கைச் சமூகத்தினருக்கும் நன்றி!
ம.செந்தமிழன்

இது பற்றிய மேலதிக அதிர்ச்சி தகவல் இதோ...இங்கே

http://www.aanmigakkadal.com/2013/03/blog-post_5267.html

http://suvanampoga.blogspot.in/2013/03/blog-post_912.html#.UnhwY3CBnXA

http://www.amarkkalam.net/t7875-65


KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

KFCல் உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார். புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை. அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையேஉபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை. இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!! அந்தவகைக் கோழிகளின் சில படங்கள் கீழே…            

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!! நல்லா யோசிங்க.. KFCல் உண்ணும் முன்.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம்.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.

http://www.youtube.com/watch?v=99VeH0-R9Ro&feature=player_embedded

எனவே
பிராயிலர் கோழி சாப்பிடுவதை  நிறுத்தி கொள்ளுங்கள்...

Wednesday, November 6, 2013

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

பொள்ளாச்சியில் திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு ‍ 3 இளைஞர்கள் கைது

ஆசிட் விற்பனையை அரசாங்கம் தடை செய்தாலும் ஆசிட் வீச வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதை எப்படியும் பெறத்தான் செய்வான்.

திருட்டு ஒரு குற்ற செயல் என்று அறிவித்து விட்டதால் திருட்டு குறைந்து விடுவதில்லை என்பது போல..



தடை செய்யப்பட்ட எந்த பொருளும், எளிதிலோ அல்லது (பண பலம் கொண்டு) சற்றே சிரமமப்பட்டோ பெறப்படும் வகையில் தான் நமது நாட்டு சட்டங்களின் ஓட்டைகள் அமைந்துள்ளன.

ஒரு பெண்ணை சீரழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒருவனுக்கு ஒரு வேளை ஆசிட் கிடைக்கவில்லை என்றால் துப்பாக்கி கிடைக்கும், அதுவும் கிடைக்கவில்லை என்றால் கத்தி, அரிவாள் கிடைக்கும்.

அதே சமயம், இவ்வாறு ஒரு பெண்ணின் உயிரை பறித்தால் உன் தலை இருக்காது என்று சட்டம் இயற்றினால், அவனது கையில் ஆசிடை இலவசமாக கொடுத்தால் கூட அதை பயன்படுத்த மாட்டான்.

இது தான் வேறுபாடு ! இது தான் மனித இயல்பு !!

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

Thanks:Nashid Ahmed

Tuesday, November 5, 2013

ஆஸ்திரேலியன் ஆரஞ்சு...... ஆபத்து வந்துருச்சு

கிர்ணிப்பழம் சைஸில் இருந்தது அந்தக் கொய்யாப்பழம். 'இவ்ளோ பெரிசா?’ என வாய் பிளந்தபோது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ஹைபிரிட் கொய்யா!'' என்றார் பழக் கடைக்காரர். 
                                                         
பக்கத்தில், அப்படியே நம் ஊர் கொய்யா சைஸில், கொட்டை இல்லாத கலிஃபோர்னியன் திராட்சை; செக்கச்செவேல் என காபூல் மாதுளை, விதை இல்லாத பெரிய இலந்தை, 'லேத்’தில் அடித்துச் செய்ததுபோல் வார்த்தெடுத்த பளபள பெங்களூரு கேவன்டிஷ் வாழைப்பழம். 
                                                         
விவரம் அறியாப் பழக்கடைக்காரர், ''எல்லாமே நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!'' என்றார். 'இனிப்பு மட்டும்தான் பழத்தின் சுவையா?’ என்ற யோசனையுடன் கொஞ்சம் நகர்ந்தபோது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ணத்தில் ஆஸ்திரேலியன் ஆரஞ்சு கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. 
                                                                 
வழக்கமாக, கொஞ்சம் தொளதொளவென்ற தோலுடன், உரிக்க ரொம்பத் தோதாக இருக்குமே... அந்த கமலா ஆரஞ்சைக் கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடிவது இல்லை. ஆனால், கமலா ஆரஞ்சு பெயரில் ஏராளமான ஆரஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு, அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவை எல்லாம் 'கமலா’வுக்கோ, 'கமலாவின் பாட்டி’க்கோ தூரத்து உறவுகூடக் கிடையாது.                  

இப்படி எல்லாமே பெரிது பெரிதாக, கண்களை ஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத் திலும் இறக்குமதி செய்யப்படும் இவை எந்த அளவுக்கு உடலுக்கும் உழவுக்கும் நல்லது? 'இனிப்புச் சுவைக்கு ஸ்வீட் எல்லாம் கொடுத் துப் பிள்ளைங்களைக் கெடுக்காதீங்க... பழம் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப பழங்கள் மேலயும் பழி சொல்றீங்க!’ என்று பதற வேண்டாம். பழங்களைப் பரிந்துரைப்பதன் காரணமே, அதில் நிறைந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இவை எல்லாவற்றையும் கூட்டு இனிப்பு சேர்த்து சுவைபட அவை வழங்கும் அற்புதமான மருத்துவத் திறனுக்காகத்தான். 

ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு இனங்கள் எத்தனை சத்து நிரம்பியவை? அதிக இனிப்பும், பருமனும், கூடுதல் சாறும் மட்டுமே இவற்றில் கிடைக்கும். ஒட்டு ரகங்களின் கூடுதல் இனிப்பைப் பார்த்தால், 'கொஞ்சம் வைட்டமின் தெளித்த மைசூர்பாகு தேவலையோ?’ எனத் தோன்றுகிறது. கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்னைக்கும் உகந்தது என்பதால், மாதுளைக்கு எப்போதும் கனி வகையில் தனி இடம் உண்டு. 

ஆனால், தற்போது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுளையின் இனிப்பு, நம் ஊர் நாட்டு மாதுளையை ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும் இவை கர்ப்பிணிக்கும் சர்க்கரை வியாதிக்காரருக்கும் சங்கடம் அல்லவா? மெள்ள உள்வாங்கும் இனிப்புடன், இரும்புச் சத்தையும், நார்ச் சத்தை யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின் சுவையும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுளை, விலை குறைவாக, ஓரமாக இருப்பது வேதனை. 

மதுரை, தேனிப் பக்கம் கொடி கட்டிப் பறக்கும் கொட்டை உள்ள பன்னீர்த் திராட்சையின் உள்ளே இருக்கும் விதைகூட ஆரோக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'மஸ்கட் திராட்சை’ என விவசாயிகளால் அழைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்சையின் கொட்டையில் உள்ள எண்ணெய், இதய நோய்க்கு மருந்து. 'ரிஸ்வெரட்ரால்’ எனும் சத்து நிறைந்திருக்கும் இந்த கிரேப் சீட் ஆயிலுக்கு இப்போது கிரேக்க உலகிலும் வளர்ந்த நாடுகளிலும் ஏக கிராக்கி. ஆனால் நாமோ, 'இதென்ன துவர்க்கிறது’ எனத் திராட்சையைத் தின்றுவிட்டு, கொட்டையைத் துப்புகிறோம். 

புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபோர்னியன் இனிப்பு திராட்சையை நமக்குக் கூடுதல் விலையில் தந்துவிட்டு, திராட்சை விதை எண்ணெயைக் கேப்சூல் குப்பியில் அடைத்து, மருத்துவரை வைத்து மிரட்டிச் சாப்பிடவைக் கிறார்கள். ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பெரும்பாலான கனிகள் ஒட்டுரகம்தான். இன்னும் இன்னும் இறக்குமதி செய்யப்படும் புதுப்புது ஒட்டுக்கள் மூலம், இனிப்பாக, பெரிதாக நமக்குள் புகும் சுவைகள், இத்தனை நாள் இருந்துவந்த பழங்களின் பொத்தாம்பொதுவான பயனையும் காலி செய்துவிடுமோ என்று அஞ்சவைக்கிறது. 

உணவின் சத்து விஷயம் இப்படி என்றால், ஹைபிரிட்டாக வரும் தாவரங்களுக்குத் தேவைப்படும் உரமும், பூச்சிக்கொல்லியும், தண்ணீரும், மண்ணை யும் விண்ணையும்,விலைமதிப்பில்லாத மனித உடலை மாசுபடுத்தும் கேடு இன்னொரு பக்க வேதனை. 

'இத்தனை கோடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப் பக்கம் பறித்து வருவதைவைத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பேசுங்க பாஸ்!’ என இணையத்தில் இதைப் படிக்கும் யாரேனும் திட்டி எழுதக்கூடும். போதாக்குறைக்கு, போன வாரம் நமது பிரதம மந்திரி வேறு, 'விவசாயத்தில் தொழில்நுட்பம் ரொம்ப அவசியம். மேம்போக்காக எதிர்க்க வேண்டாம். விவாதிக்க வேண்டும்’ என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிஉள்ளார். 

நாங்களும் தொழில்நுட்பத்தை மேம்போக்காக எதிர்க்கவில்லை. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள் நோக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல் உன் அனுபவத்தைவிட மேலானது’ என்ற மமதை இன்றி விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விடை மட்டும் தான் சூழலுக்கு இசைவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம் தரும். நாட்டின் இறையாண்மைக்குப் பலம் தரும்; வாருங்கள் விவாதிப்போம்! .

சீக்கிரமே சம்பாத்தித்து சீக்கிரம் அனுபவித்து சீக்கிரமே சாகும் திட்டத்தை செயல்படுத்தும் கார்பரேட்  பணமுதலைகளின் குறுக்கு புத்தி இது.

நன்றி-மருத்துவர் சிவராமன்.

மேலும் அதிக விவரங்களுக்கு...

http://valaiyukam.blogspot.in/2011/04/bt.html


Monday, November 4, 2013

மரபணு மஞ்சள் வாழைப்பழம் -அதிர்ச்சி தகவல்

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு  வாழைப்பழமாவது  சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு  மாற்று பெரிய  மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே  வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். 

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ்,  தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி,  புட் பாய்சன்... என்று கடுமையாக  அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது  இந்த மரபணு மாற்று  மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

 இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.  இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். 
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். 

பூச்சிக் கொல்லிகளை  அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை  என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன்  இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக  விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை. 
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ்  வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
 
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின் டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர். 

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில்  இந்த  பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை   பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது. 

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய  கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. 

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த  பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. 

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே  விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.  ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒரு முறை மட்டும் காய்த்து கனியாகும். 
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்த நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது
 
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது:
 

பெங்களூர் வாழைப்பழம் என்று  விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி.  ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி.  ரக  கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது. இவ்வகை பி.டி.  ரக மரபணு மாற்று  வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்கமுடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்
         
புறக்கணிப்போம் ...புறக்கணிப்போம்...
மரபணு மாற்றுப்பயிர்களை புறக்கணிப்போம்

Saturday, November 2, 2013

வீட்டிற்கு இரு மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம்...இது என்ன வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம் என நினைக்கலாம்.
காலில் சக்கரம் கட்டாத குறையாக மக்கள் ஓடி உழைக்கும் காலம் இது....

அருகில் உள்ள மனிதர்களிடம் பேசக்கூட,உடல் நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் எந்நேரமும் பிசியாக உள்ளனர்...

இவ்வளவு உழைத்தும் இவர்கள் அடகு வைப்பது தம் உடல் நலனைத்தான்...
இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லா வீடுகளிலும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு உள்ளது மலச்சிக்கலும்,மூல நோயும்,
குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினைகள் தான்.....

பதினைந்து வருடத்திற்கு முன்னதாக வீட்டுக்கு வீடு முருங்கை மரமும்,பப்பாளியும் இருந்தது...ஆண்,பெண் ஹார்மோன் பிரச்சினைக்கு வீட்டிலேயே சிறந்த தீர்வு கிடைத்தது....

ஆனால் இக்கால மருத்துவர்களால் , இவ்வியாதிகள் பணம் கொட்டும் தொழிலாக பார்க்கப்படுகிறது...2000 ஆண்டு வெறும் 90 கோடி புழங்கிய குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினை மருத்துவ உலகில் இப்போது 40 ஆயிரம் கோடி கொட்டும் தொழிலாக உள்ளது...

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே இதற்கு அருமையான தீர்வு இருக்க ரசாயன மருந்துகளில் மக்கள் மயங்கிக் கிடப்பதேன்....???!!!

முருங்கையிலும்,பப்பாளிப்பழத்திலும் சிறந்ததோர் தீர்வு இருக்க வேறென்ன வேண்டும்...???

முருங்கையும்,பப்பாளியும் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய மரங்கள்...இவை வளர சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும்.சிலர் இவை இரண்டையும் மொட்டை மாடியில்  கூட வளர்க்கின்றனர்.ஆனால் காய்க்கும் திறன் குறையும்.

நகர்ப்புறங்களில் ஒரு சதுர அடி இடம் கிடைத்தாலும் அதிலும் சிமெண்டை கொட்டி பிளாட்டாக விற்றுவிடுகின்றனர்.பணம் நிறைய சம்பாதித்தும் உடல் ஆரோக்கியத்தை இழந்த வாழ்க்கையினால் என்ன பயன்...???

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்...???!!!

சீக்கிரமே பலன் தரும் அதிக இடம் தேவைப்படாத ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆக வேண்டிய இம்மரங்களினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் கொஞ்ச நஞ்சமல்ல

முருங்கையின் பலன்கள்:

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். 

குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது .
                                                      
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பப்பாளியின் பயன்கள்:-

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு மேலே விற்கும்போது அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ ரூபாய் 40 மட்டுமே. ஆகவே பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது.

பழங்களில் மிக மிக குறைவான கலோ¡¢ பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோ¡¢களே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
                                                         

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன. அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-c மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. 

நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எ¡¢ச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயா¡¢க்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீ¡¢ம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம்.

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது. முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.

பெண்களுக்கு தீராத பிரச்னை என்றால் முடி கொட்டும் பிரச்னை தான். தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதை பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான ஆகாரமாக இருக்கும்.


  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தென்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவன் எந் நோயையும் அதற்குரிய 
நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
புகாரி-5678

இவ்வளவு பயன் தரும் எளிதில் கிடைக்க கூடிய இம்மரங்கள் நம் அனைவருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போமா...???!!!