Thursday, November 15, 2012

மக்களாட்சி கிராமம்

திருநந்திக்கரை. கன்னியாகுமரி மாவட்டமும் கேரள எல்லையும் கைகுலுக்குமிடத்தில் இருக்கிற கிராமம். தமிழும் மலையாளமும் கலந்து பேசுகிறார்கள். எங்கெங்கு காணினும் பச்சைப்பசேல் ரப்பர் மரங்கள். தரமான கான்க்ரீட் சாலைகள். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலுமே கழிப்பறைகள். நூலகம் சுறுசுறுப்பாய் இயங்குகிறது. வசதியான சிறுவர் பூங்கா. பாதுகாக்கப்பட்ட குடிநீர். சொல்லிக்கொண்டே போகலாம். இது நம்மூர்தானா என்று மூக்கின்மேல் விரல் வைத்தபடியே கிராமவலம் வந்தோம்.




முழுக்க முழுக்க மக்கள் கண்காணிப்போடு இங்கே கிராம வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. முறைகேடு நடந்தால் முறையாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். ஏதேனும் பணி இழுத்தடிக்கப்பட்டால், துரிதப்படுத்தத் தேவையான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். புறக்கணிக்கப்பட்டால் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். நிஜமான, ‘நமக்கு நாமே’ திட்டத்தை திருநந்திக்கரையில் கண்டோம்.



சில காலத்துக்கு முன்பு எங்களுக்கு போடப்பட்ட கான்க்ரீட் சாலை தரமானதாக இல்லை. ஒரு மழைக்குக் கூட தாங்கவில்லை. அதுபோலவே குழந்தைகள் நல மையம் கட்டப்பட்ட போதும் கூட தரமற்றதாக இருந்தது. இம்மாதிரி எந்த வளர்ச்சிப் பணிகளும் முழுமையானதாக இல்லை என்கிற நிலை இருந்தபோது அனைத்து ஊர் மக்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டோம். இனி அரசுப் பணிகளை நாமே நேரடியாகக் கண்காணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி, அதன் ஆரம்பமாக, ‘கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்கம்’ என்று ஓர் அமைப்பினை உருவாக்கினோம்" என்கிறார் கவுன்சிலர் சசிக்குமார்.



ஐநூறு குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் வசிக்கின்றன. கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்கத்தில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டன. சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என்று ஒவ்வொரு குழுவிலும் பதினைந்து பேர் இருப்பார்கள். அதிகாரிகளுக்கு புகார் அளித்தல், தேவைப்படும்போது போராட்டம் நடத்துதல், பணிகளைக் கண்காணித்தல், ஒப்பந்தக்காரர்களுக்கு ஆலோசனை அளித்தல் என்று எல்லாப் பணிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் இருக்கின்றன.



எங்கள் ஊர் அரசுப்பள்ளியில் முதலாம் வகுப்புக்கு குழந்தைகளை சேர்க்கும்போது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் சேர்த்து ஊர் மக்கள் பாராட்டு விழா நடத்துகிறார்கள். ஒரு கலாச்சாரமாக உருவெடுத்துவிட்ட இந்த விழா மூலமாக பள்ளிக்கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இன்று கிராமத்தில் பள்ளிக்கு வராத குழந்தைகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது" என்று அடுத்த ஆச்சரிய மகிழ்ச்சியை வழங்குகிறார் ஆசிரியர் திவாகரன்.



‘’எங்கள் அமைப்பின் மூலம் கண்காணிப்பதால் பிரச்சினைகளும் வந்திருக்கின்றன. ஒப்பந்தக்காரர்கள் எங்கள் பகுதியை புறக்கணித்தனர். நாங்கள் மிகவும் அழுத்தம் கொடுப்பதாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கூறினார்கள். ஆனால் நாங்கள் எங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தற்போது நாங்கள் எதிர்பார்த்த அளவில் கிராமம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது" என்கிறார் சுந்தரேசன்.



மக்களே களமிறங்கி ஊரை முன்னேற்றி இருக்கிறார்கள். இந்த வெற்றி இவர்களை அடுத்தகட்ட திட்டங்களுக்கு நகர்த்தியிருக்கிறது. விரைவில் கிராம வளர்ச்சித் தகவல் மையம், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், வீட்டுக்கொரு காய்கறித் தோட்டம் என்று அடுத்தடுத்த புரட்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த யோசித்து வருகிறார்கள்.



‘காந்தி கண்ட கிராம ராஜ்யம்’ என்று வாயளவில் பேசிக்கொண்டிருக்காமல், செயல்பாடுகளுக்கு கொண்டு வந்திருக்கும் திருநந்திக்கரை மக்களை வாழ்த்துவோம்; பின்பற்றுவோம்.


நன்றி-புதியதலைமுறை வார இதழ்

9 comments:

  1. ஸலாம் சகோ நல்ல பகிர்வு...

    ஃபாண்ட் ஸ்டைல் மாத்துங்க...ஒரு வரிக்கும் அடுத்த வரிக்குமான நெருக்கம்...படிப்பதில் சிரமத்தை கொடுக்கிறது...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ....
      தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..
      கண்டிப்பாக ஃபாண்ட் ஸ்டைல் மாற்றுகிறேன் சகோ..:-)

      Delete
  2. திருநந்திக்கரை மக்ககளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி:-)

      Delete
  3. சலாம் சிறந்த பகிர்வு சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ....
      கருத்து சொன்னதற்கு நன்றி

      Delete
  4. மிகவும் அருமையான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்.........

    சிறந்த பகிர்வு சகோதரி பகிர்வுக்கு நன்றி..........

    ‘காந்தி கண்ட கிராம ராஜ்யம்’ என்று வாயளவில் பேசிக்கொண்டிருக்காமல், செயல்பாடுகளுக்கு கொண்டு வந்திருக்கும் திருநந்திக்கரை மக்களை வாழ்த்துவோம்; பின்பற்றுவோம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது