Sunday, February 24, 2013

முட்டாள் தனத்தின் முன் மாதிரி .....

சாதனைகள் என்ற பெயரில் தன்னை துன்புறுத்தி கொண்டு 
மற்றவர்களையும் துன்புறுத்துபவர்களை ஊடகங்கள் 
பெருமையாக பிரபலப்படுத்துகின்றன.......
உண்மையில் அவை எல்லாம் வேதனை,கொடூரம் ...... 
சாதனை என்பது தனக்கும் தன் சுற்றத்திற்கும் பின் வரும் 
சமுதாயத்திற்கும் பயன்படுவதே ஆகும் ....

ஓவியர் ஹுசைனி தன் இரத்தம் மற்றும் மற்ற வீரர்களின் இரத்தத்தை 
வீண்விரயம் செய்ததை சாதனை என தினத்தந்தி பாராட்டியுள்ளது மிகப்பெரும் 
அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

அதிர்ச்சியான அச்செய்தி ...............
ரத்தத்தை உறைய வைத்து உருவாக்கப்பட்ட 
ஜெயலலிதா சிலை வில்வித்தை வீரர் ஹுசைனி சாதனை




11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிலையை உருவாக்கி வில்வித்தை வீரரும், சிற்பியுமான ஹுசைனி சாதனை படைத்துள்ளார்.இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு ஹுசைனி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

65–வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானத்தை வலியுறுத்தியும், வில்வித்தை கழகத்துக்கு முதல்–அமைச்சர் அளித்து வரும் உதவிக்கு நன்றி கூறும் வகையிலும், முதல்–அமைச்சரின் 65–வது பிறந்த நாளை முன்னிட்டும் ரத்தத்தை உறைய வைத்து அதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை உருவாக்கியுள்ளேன்.இதற்காக 8 ஆண்டுகள் எனது உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்தேன். அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர். ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், முதல்–அமைச்சரின் 65–வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளேன்.உறைய வைத்த ரத்தத்தில் உருவச் சிலையை படைத்திருப்பது உலகில் இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாடு முழுவதும் இந்தச் சிலையை 15 நிமிடம் மட்டுமே வெளியே வைத்திருக்க முடியும். அதற்கு மேல் வைத்திருந்தால் சிலை உருகிவிடும். இந்த சிலையை, பிரத்யேக ஏ.சி. வாகனத்தில் டெல்லி எடுத்துச் சென்று அங்குள்ள லலித்கலா அகாடமியில் காட்சிக்காக வைக்க இருக்கிறேன்.அதன்பின்னர் முதல்–அமைச்சரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதத்திலும், ரத்ததானத்தை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.

இதற்கு முன்பு 1994–ம் ஆண்டு எனது கைகளில் 101 கார்களை ஏற்றியும், 5 ஆயிரம் ஓடுகளையும், ஆயிரம் செங்கல்களையும் உடைத்தேன். அப்போது எனது கைகளில் இருந்து கொட்டிய ரத்தத்தைக் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஓவியம் வரைந்தேன். 2004–ம் ஆண்டு முதல்–அமைச்சரின் 57–வது பிறந்த நாளை முன்னிட்டு, எனது ரத்தத்தால் முதல்–அமைச்சரின் 57 ஓவியங்களை வரைந்தேன்.சென்னையில் தேசிய வில்வித்தை போட்டி நடத்துவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் எனக்கு ரூ.50 லட்சம் வழங்கினார். அப்போது முதல்–அமைச்சர் கூறுகையில், ‘இனிமேல் எனது ரத்தத்தால் அவரது ஓவியங்களையோ, சிலைகளையோ வடிக்கக்கூடாது’’ என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார். 8 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளதால் இந்த சிலை திறப்புக்குப் பிறகு முதல்–அமைச்சரின் உருவத்தை ரத்தத்தால் இனிமேல் உருவாக்கமாட்டேன் என்று நானும் முதல்–அமைச்சரிடம் உறுதி அளித்தேன்.

தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவைக் குறிக்கும் வகையில் இந்த சிலைக்கு ‘தமிழ்த்தாய்’ என்று பெயர் சூட்டியுள்ளேன்.

ஆபத்தான நேரத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பலருக்கு 
இரத்தம் தேவைக்காக  உறவினர்கள் அல்லாடிக்கொண்டிருக்கும் போது  
இது போன்ற பைசா பிரயோஜனமில்லாத செயல்கள் சமூக அக்கறையின்மையையும்,பிரபலமாவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யும் மோசமான மனநிலையை   வெளிச்சம் போட்டு காட்டுகிறது......

இதே போன்று சென்ற வருடம் போலீஸ் கான்ஸ்டபில் ஒருவர்
சாதனை என்ற பெயரில் தன் உயிரை மாய்த்துக்கொண்டதும்
மனைவியும்,பிள்ளைகளும் கதறி அழுதது இன்னும்
மறக்கமுடியாத சம்பவம் ....

இது போன்று தன்னை துன்புறுத்தும் சாகசங்களை
அரசாங்கம் தடை செய்வதே சாலச் சிறந்ததாகும்.....  

ஊட்டி: ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. போலீசார் சார்பில் பைக் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஆயுதப்படை கான்ஸ்டபிள் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். கராத்தேயில், "பிளாக் பெல்ட்' பெற்ற இவர், ஓடுகளை காலால் உதைத்து தூள் தூளாக்கினார். அதன் பின், தரையில் மாணவர்களை வரிசையாக படுக்கச் செய்து, அவர்களைத் தாண்டி சாகசம் புரிந்தார். முதலில் ஐந்து மாணவர்களை படுக்க வைத்து தாண்டி பல்டி அடித்தார். பின், மாணவர்கள் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தி பல்டி அடித்தார். பிறகு, 13 மாணவர்களை படுக்க வைத்து அவர்களைத் தாண்டி பல்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.


மாணவர்களைத் தாண்டி சாகசத்தை முடிக்கும் தறுவாயில், பாண்டியன் நிலை தடுமாறி, "மேட்' மீது தலை குத்திய நிலையில் விழுந்தார்; அவரால் எழ முடியவில்லை. ஏதோ நடந்துவிட்டதென உஷாரடைந்து பலரும் ஓடி வந்து அவரை மீட்டனர். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு, நிலை குலைந்து, கண்கள் மேல் நோக்கிய நிலையில் மயக்கமடைந்திருந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை உடனடியாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


மனைவி கதறல்: தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த பாண்டியனுக்கு சத்யா என்ற மனைவியும், ஏழு வயதான ஸ்ரீவர்ஷிணி என்ற மகளும், 11 மாத சுஜித் பாண்டியன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆயுதப்படை பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். பாண்டியனின் உடலுக்கு, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி., நிஜாமுதீன் ஆகியோர், அரசு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர். சக போலீசார், பாண்டியன் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அருகிலிருந்த பாண்டியனின் மனைவி கதறியதைப் பார்த்து பலரும் கண்ணீர் விட்டனர்.


பார்வையாளர்கள் அதிர்ச்சி: விபத்தின் போது மைதானத்தில் இருந்த ஊட்டியைச் சேர்ந்த பிரதாப் கூறுகையில், "பாண்டியன், ஆரம்பம் முதலே மிகவும் துல்லியமாக சாகசம் புரிந்தார். மாணவர்களை வரிசையாக தரையில் படுக்க வைத்து சாகசம் செய்த போது, தான் தாண்ட வேண்டிய இடைவெளியை சரியான முறையில் கடக்க முடியாமலோ அல்லது தவறான கணிப்பின் காரணமாகவோ, தரை விரிப்பின் முன்புறமாக விழுந்து பல்டி அடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது தலை, உயரமான தரை விரிப்பின் மீது நேரடியாக மோதி சம்பவம் நேரிட்டுவிட்டது. ஆரம்பத்தில், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றே கருதினோம். அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியில் உறைந்தோம். பல ஆயிரம் பேரின் முன்னிலையில், கைதட்டலுக்கு இடையே அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது, வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்' என்றார்.

1 comment:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது