Thursday, March 28, 2013

பால்கனியில் காய்கறிகள்!!!

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த லக்ஷ்மி தன் வீட்டு மாடியிலுள்ள பால்கனியை, பச்சைப்பசேல் என மினி தோட்டமாக மாற்றியுள்ளார். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், பழங்களை இத்தோட்டத்திலிருந்தே பறித்தெடுத்துக் கொள்கிறார். மனமும் கொஞ்சம் இடமும் இருந்தால், எல்லோருமே இப்படி தோட்டம் போடலாம்" என்கிறார் உற்சாகமாக...

என் பாட்டிக்கு செடி, கொடிகள் என்றால் அலாதிப் பிரியம். குழந்தைப் பருவத்தில் அவருடன் கேரளாவில் வளர்ந்தேன். அவருடனே இருந்ததால், குழந்தையாக இருந்தபோதே தாவரங்களின் மேல் எனக்கும் அன்பு வந்துவிட்டது. பாட்டியும் நானும் பல வகையான செடிகளை வளர்ப்போம். தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகளிடம்தான் ஓடுவேன். அதற்கு தண்ணீர் ஊற்றுவது, அன்றைக்கு புதிதாகப் பூத்திருக்கும் பூக்களை, பச்சைப் பசேலென்று பிஞ்சு விட்டிருக்கும் காய்களைப் பார்ப்பது, எத்தனை பூக்கள், காய்கள் புதுசாக வந்திருக்கின்றன என்று எண்ணுவது இவையெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களாக இருந்தன.

திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்துவிட்டேன். கேரளாவில் எங்கும் பசுமையாக இருக்கும். சென்னையில் அப்படியில்லை. ஆனாலும் செடிகளின் மேல் இருந்த ஆர்வம் மட்டும் குறையவில்லை. செடிகள் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. எதையோ பறிகொடுத்ததைப் போன்ற உணர்வு. அப்போதுதான் இந்த ஐடியா வந்தது. என் விருப்பத்தைப் புரிந்து கொண்ட கணவரின் உதவியுடன், என் வீட்டு பால்கனியில் சிறிய தோட்டம் அமைத்துக் கொண்டேன்.

பால்கனியில் சிறு சிறு தார்ப்பாய் பைகளிலும் மண் தொட்டிகளிலும் செம்மண், ஆற்று மண், தேங்காய் நார், ஆட்டுப்புழுக்கை, எரு, மக்கிய இலை மற்றும் தழைகள் போன்றவற்றை நிரப்பி, அதில் செடிகளை நட வேண்டும். செடியின் வேர்ப் பகுதியில் எப்போதும் நீரைத் தேக்கி வைக்க வசதியாக தேங்காய் நார்களை உபயோகிக்க வேண்டும்.

நாட்டுக் காய்கறிகளின் விதைகள், கீரை விதைகளை தொட்டியிலோ அல்லது பைகளிலோ விதைத்து விட்டால், 15 நாட்களில் முளைத்து விடும். அடுத்த 30வது நாளில் செடிகள் நன்கு வளர்ந்து, நமக்குத் தேவையான காய்கறிகளும் கீரையும் வந்துவிடும். ஒருநாள் விட்டு ஒருநாள் கீரை, காய்களைப் பறித்துக் கொள்ளலாம். 

என் வீட்டுத் தோட்டத்தில் முள்ளங்கி, லெமன் கிராஸ், பப்பாளி, தக்காளி, பஜ்ஜி மிளகாய், கத்திரிக்காய், காலிஃபிளவர், முருங்கை, கொத்தமல்லி, வல்லாரக்கீரை, அரைக்கீரை, காராமணி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிச் செடிகளை ஜாடிகள் மற்றும் பைகளிலும் குண்டு மல்லி, வெற்றிலை, பீர்க்கங்காய் மற்றும் புடலங்காய் போன்ற கொடி வகைகளை பந்தலமைத்தும் வளர்த்து வருகிறேன். இங்கு விளையும் காய்கறிகள் அனைத்துமே என் வீட்டிற்குப் போதுமானதாக உள்ளன. 

மேலும் அனைத்து செடிகளையும் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் நோயின்றி செழிப்பாக வளர்த்து வருகிறேன். குறிப்பாக, பூச்சித் தாக்குதலை தடுப்பதற்காக வசம்புப் பொடியை நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் மாதம் இருமுறை தெளித்து விடுவேன். அவ்வப்போது பஞ்சகவ்யா, ஆட்டுப் புழுக்கை போன்றவற்றையும் உரமாகப் பயன்படுத்துகிறேன். 

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வராது. தவிர, வீட்டு பால்கனியில் இருப்பதால் நமக்கு சுகாதாரமான சூழலும் சுத்தமான காற்றும் கிடைக்கும். மாலையில் சிறிது நேரம் செடிகளுடன் இருக்கும்போது, அனுபவப்பூர்வமாக இதை உணரலாம்" என்கிறார், செடிகளை வாஞ்சையாக வருடியபடி.பலருக்கு தாவரங்களின் மேல் ஈடுபாடு இருக்கும். ஆனால், நகரச் சூழலில் எப்படி தோட்டம் போடுவது, பராமரிப்பது என்று வழிமுறை தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்காக தற்போது லக்ஷ்மி தன் கணவருடன் சேர்ந்து, "GARDEN DEVELOPERS' என்ற நிறுவனத்தை நிறுவி வழிகாட்டுகிறார். தொடர்புக்கு: 94444 12111, 98401 20301.


-எல்லுச்சாமி கார்த்திக் 

Sunday, February 24, 2013

முட்டாள் தனத்தின் முன் மாதிரி .....

சாதனைகள் என்ற பெயரில் தன்னை துன்புறுத்தி கொண்டு 
மற்றவர்களையும் துன்புறுத்துபவர்களை ஊடகங்கள் 
பெருமையாக பிரபலப்படுத்துகின்றன.......
உண்மையில் அவை எல்லாம் வேதனை,கொடூரம் ...... 
சாதனை என்பது தனக்கும் தன் சுற்றத்திற்கும் பின் வரும் 
சமுதாயத்திற்கும் பயன்படுவதே ஆகும் ....

ஓவியர் ஹுசைனி தன் இரத்தம் மற்றும் மற்ற வீரர்களின் இரத்தத்தை 
வீண்விரயம் செய்ததை சாதனை என தினத்தந்தி பாராட்டியுள்ளது மிகப்பெரும் 
அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

அதிர்ச்சியான அச்செய்தி ...............
ரத்தத்தை உறைய வைத்து உருவாக்கப்பட்ட 
ஜெயலலிதா சிலை வில்வித்தை வீரர் ஹுசைனி சாதனை




11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிலையை உருவாக்கி வில்வித்தை வீரரும், சிற்பியுமான ஹுசைனி சாதனை படைத்துள்ளார்.இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு ஹுசைனி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

65–வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானத்தை வலியுறுத்தியும், வில்வித்தை கழகத்துக்கு முதல்–அமைச்சர் அளித்து வரும் உதவிக்கு நன்றி கூறும் வகையிலும், முதல்–அமைச்சரின் 65–வது பிறந்த நாளை முன்னிட்டும் ரத்தத்தை உறைய வைத்து அதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை உருவாக்கியுள்ளேன்.இதற்காக 8 ஆண்டுகள் எனது உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்தேன். அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர். ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், முதல்–அமைச்சரின் 65–வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளேன்.உறைய வைத்த ரத்தத்தில் உருவச் சிலையை படைத்திருப்பது உலகில் இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாடு முழுவதும் இந்தச் சிலையை 15 நிமிடம் மட்டுமே வெளியே வைத்திருக்க முடியும். அதற்கு மேல் வைத்திருந்தால் சிலை உருகிவிடும். இந்த சிலையை, பிரத்யேக ஏ.சி. வாகனத்தில் டெல்லி எடுத்துச் சென்று அங்குள்ள லலித்கலா அகாடமியில் காட்சிக்காக வைக்க இருக்கிறேன்.அதன்பின்னர் முதல்–அமைச்சரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதத்திலும், ரத்ததானத்தை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.

இதற்கு முன்பு 1994–ம் ஆண்டு எனது கைகளில் 101 கார்களை ஏற்றியும், 5 ஆயிரம் ஓடுகளையும், ஆயிரம் செங்கல்களையும் உடைத்தேன். அப்போது எனது கைகளில் இருந்து கொட்டிய ரத்தத்தைக் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஓவியம் வரைந்தேன். 2004–ம் ஆண்டு முதல்–அமைச்சரின் 57–வது பிறந்த நாளை முன்னிட்டு, எனது ரத்தத்தால் முதல்–அமைச்சரின் 57 ஓவியங்களை வரைந்தேன்.சென்னையில் தேசிய வில்வித்தை போட்டி நடத்துவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் எனக்கு ரூ.50 லட்சம் வழங்கினார். அப்போது முதல்–அமைச்சர் கூறுகையில், ‘இனிமேல் எனது ரத்தத்தால் அவரது ஓவியங்களையோ, சிலைகளையோ வடிக்கக்கூடாது’’ என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார். 8 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளதால் இந்த சிலை திறப்புக்குப் பிறகு முதல்–அமைச்சரின் உருவத்தை ரத்தத்தால் இனிமேல் உருவாக்கமாட்டேன் என்று நானும் முதல்–அமைச்சரிடம் உறுதி அளித்தேன்.

தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவைக் குறிக்கும் வகையில் இந்த சிலைக்கு ‘தமிழ்த்தாய்’ என்று பெயர் சூட்டியுள்ளேன்.

ஆபத்தான நேரத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பலருக்கு 
இரத்தம் தேவைக்காக  உறவினர்கள் அல்லாடிக்கொண்டிருக்கும் போது  
இது போன்ற பைசா பிரயோஜனமில்லாத செயல்கள் சமூக அக்கறையின்மையையும்,பிரபலமாவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யும் மோசமான மனநிலையை   வெளிச்சம் போட்டு காட்டுகிறது......

இதே போன்று சென்ற வருடம் போலீஸ் கான்ஸ்டபில் ஒருவர்
சாதனை என்ற பெயரில் தன் உயிரை மாய்த்துக்கொண்டதும்
மனைவியும்,பிள்ளைகளும் கதறி அழுதது இன்னும்
மறக்கமுடியாத சம்பவம் ....

இது போன்று தன்னை துன்புறுத்தும் சாகசங்களை
அரசாங்கம் தடை செய்வதே சாலச் சிறந்ததாகும்.....  

ஊட்டி: ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. போலீசார் சார்பில் பைக் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஆயுதப்படை கான்ஸ்டபிள் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். கராத்தேயில், "பிளாக் பெல்ட்' பெற்ற இவர், ஓடுகளை காலால் உதைத்து தூள் தூளாக்கினார். அதன் பின், தரையில் மாணவர்களை வரிசையாக படுக்கச் செய்து, அவர்களைத் தாண்டி சாகசம் புரிந்தார். முதலில் ஐந்து மாணவர்களை படுக்க வைத்து தாண்டி பல்டி அடித்தார். பின், மாணவர்கள் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தி பல்டி அடித்தார். பிறகு, 13 மாணவர்களை படுக்க வைத்து அவர்களைத் தாண்டி பல்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.


மாணவர்களைத் தாண்டி சாகசத்தை முடிக்கும் தறுவாயில், பாண்டியன் நிலை தடுமாறி, "மேட்' மீது தலை குத்திய நிலையில் விழுந்தார்; அவரால் எழ முடியவில்லை. ஏதோ நடந்துவிட்டதென உஷாரடைந்து பலரும் ஓடி வந்து அவரை மீட்டனர். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு, நிலை குலைந்து, கண்கள் மேல் நோக்கிய நிலையில் மயக்கமடைந்திருந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை உடனடியாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


மனைவி கதறல்: தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த பாண்டியனுக்கு சத்யா என்ற மனைவியும், ஏழு வயதான ஸ்ரீவர்ஷிணி என்ற மகளும், 11 மாத சுஜித் பாண்டியன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆயுதப்படை பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். பாண்டியனின் உடலுக்கு, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி., நிஜாமுதீன் ஆகியோர், அரசு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர். சக போலீசார், பாண்டியன் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அருகிலிருந்த பாண்டியனின் மனைவி கதறியதைப் பார்த்து பலரும் கண்ணீர் விட்டனர்.


பார்வையாளர்கள் அதிர்ச்சி: விபத்தின் போது மைதானத்தில் இருந்த ஊட்டியைச் சேர்ந்த பிரதாப் கூறுகையில், "பாண்டியன், ஆரம்பம் முதலே மிகவும் துல்லியமாக சாகசம் புரிந்தார். மாணவர்களை வரிசையாக தரையில் படுக்க வைத்து சாகசம் செய்த போது, தான் தாண்ட வேண்டிய இடைவெளியை சரியான முறையில் கடக்க முடியாமலோ அல்லது தவறான கணிப்பின் காரணமாகவோ, தரை விரிப்பின் முன்புறமாக விழுந்து பல்டி அடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது தலை, உயரமான தரை விரிப்பின் மீது நேரடியாக மோதி சம்பவம் நேரிட்டுவிட்டது. ஆரம்பத்தில், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றே கருதினோம். அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியில் உறைந்தோம். பல ஆயிரம் பேரின் முன்னிலையில், கைதட்டலுக்கு இடையே அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது, வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்' என்றார்.

Thursday, February 21, 2013

நீர்நிலைகளைக் காப்போம்.... கண்ணீர் எதற்கு???? தண்ணீர் இருக்கு!!!!

இந்த வருடம் பருவ மழை பொய்த்துப்போனதால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.அதிலும் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகளின் கதி இன்னும் மோசம்.

மானவாரி நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மழை பொய்க்கும் போதெல்லாம் பயிர்கள் கருகுவதும், கருகிய பயிர்களைப் பார்த்து விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிப்பதும் வழக்கம். ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சவேரியார்பட்டினம் என்ற கிராமத்து விவசாயிகள் ‘பண்ணைக் குட்டைகள்’ (FARM POND) என்ற புதிய மாற்றுவழியால் மழை பொய்த்தாலும் ஆண்டு தோறும் லாபகரமாக விவசாயம் செய்துவருகின்றனர்.

பண்ணைக்குட்டைகள் இரண்டாம்தர நீர்த்தேக்கம் என அழைக்கப்படுகின்றன. தன் நிலத்தில் விழும் நீரை விவசாயியே பண்ணைக்குட்டை மூலம் தன் நிலத்திற்குள்ளேயே தேக்கிவைக்க முடியும். தற்போது கிராமங்களில் கண்மாய்கள் இருந்தாலும் நீர்வரத்துக் கால்வாய்கள் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் சேதமடைந்துள்ளன. இவற்றின் மூலம் கண்மாய் நிரம்பும் என்பது நடக்காத காரியம். எனவே, மானாவாரி விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகள் ஒரு சிறந்த மாற்று.

வழக்கமாக மானாவாரி நிலங்களில் மழை பெய்தவுடன் விவசாயம் தொடங்கிவிடும். பயிர் ஓரளவிற்கு வளர்ந்து, அறுவடைக்குத் தயாராகும் கடைசி நேரத்தில் மழை பொய்த்து, பயிருக்குப் பாய்ச்ச நீரின்றி பயிர்கள் கருகும் அவலம் நிகழும். ஆனால் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்ட நிலத்தில் பயிர்கள் கருகும் நிலை ஏற்படாது. நிலத்தின் ஒரு மூலையில் வெட்டப்படும் செவ்வகக்குழி போன்ற அமைப்பு கொண்ட பண்ணைக்குட்டைகள் முதல் மழை பெய்ததும் நிரம்பி விடும். பின்னர் மழை பெய்யாமல் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் பண்ணைக்குட்டைகளில் உள்ள நீர், பயிருக்கு அளிக்கப்பட்டு முழு விளைச்சல் உறுதி செய்யப்படும்.

இரண்டரை ஏக்கர் நிலத்தில் சுமார் 1,000 முதல் 1,500 கன மீட்டர் நீர் தேங்க 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணைக்குட்டை அமைக்க வேண்டும். ஆழத்தை தேவைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளலாம். பண்ணைக்குட்டை நிலத்தில் எந்தப் பகுதி தாழ்வாக உள்ளது எனக் கண்டறியப்பட்டு, அங்கு வெட்டப்படுகிறது. ஒரு பண்ணைக்குட்டை அமைக்க, தற்போதைய சூழலில் ஒரு கன மீட்டருக்கு 35 முதல் 38 ரூபாய் வரை செலவாகிறது. நீர் ஆவியாகாமல் இருக்க, செவ்வக வடிவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகளை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரித்தால் போதும்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து சுமார் 14 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சவேரியார்பட்டினம் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளின் எண்ணிக்கை 360. தானம் அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவியுடன் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது அக்கிராம மக்களின் பொருளாதாரத்தை வெகுவாக முன்னேற்றியுள்ளது.தானம் அறக்கட்டளையினர் பண்ணைக்குட்டைகளின் அவசியம் குறித்து எடுத்துக் கூறும்போது கிராம மக்கள் யாரும் உடன்படவில்லை. நிலம் வீணாகும், மண் அள்ள முடியாது என மறுத்தார்கள். முதல் ஆளாக நான் முன்வந்து, என் நிலத்தில் 2002ம் ஆண்டு நபார்டு மற்றும் தானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் நானும் சிறிது பணம் போட்டு, பண்ணைக்குட்டை அமைத்தேன். சரியாக அந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மற்ற விவசாயிகளின் நிலத்தில் நீர்ப் பற்றாக்குறையால் பயிர்கள் கருகின. ஆனால், பண்ணைக்குட்டைகளின் உதவியால் நான் நல்ல விளைச்சல் எடுத்தேன்" என மகிழ்ச்சியுடன் கூறினார், சவேரியார்பட்டினம் கிராம விவசாயியான சூசை மாணிக்கம்.

பண்ணைக்குட்டை வந்த பிறகு, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதில்லை. பயிர்கள் கருகியதும் இல்லை" என்கிறார், பண்ணைக்குட்டையால் பயனடைந்த மற்றொரு விவசாயியான மைக்கேல்.

இக்கிராம மக்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்த பிறகு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை நிகர வருமானம் ஈட்டிவருகின்றனர். அதிலும் மிளகாய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

மழை நன்றாகப் பெய்யும் காலங்களில் பண்ணைக்குட்டையிலுள்ள நீர் பயன்படாது. அந்தச் சமயங்களில் மீன் வகைகளை அவற்றில் வளர்க்கலாம். இன்னும் சில விவசாயிகள் பண்ணைக்குட்டையில் உபரி நீர் இருக்கும்போது, பருத்தி போன்றவற்றை பயிரிட்டுக் கொள்கின்றனர். மொத்தத்தில் பண்ணைக்குட்டைகள் ஒரு குட்டிப் பொருளாதார மண்டலம்" என்கிறார், தானம் அறக்கட்டளையின் முதுகுளத்தூர் பகுதி மூத்த திட்ட நிர்வாகி வெள்ளையப்பன்.

தானம் அமைப்பினரின் தொடர்பு எண்: 0452-2601673.

எம்.செந்தில்குமார்

Sunday, February 17, 2013

நோய்களைத் துரத்தும் மூலிகை உணவகம்

தமிழகத்தின் முதல் இயற்கை உணவகம் சிவகாசியில் இயங்கி வருகிறது


சிவகாசி தலைமை தபால் நிலையத்தை தாண்டிச் சென்றபோது கண்ணில் பட்டது, தாய்வழி இயற்கை உணவகம்!


இங்கே மாறன்ஜி என்பவர், கடந்த 6 வருடங்களாக முளைகட்டிய தானியங்கள்,கற்றாழைப் பாயசம்,நெறிஞ்சிமுள் சாறு, துளசி டீ போன்ற எண்ணற்ற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு 18 வித நோய்களுக்கான உணவுகளைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறார். சுகாதாரமாக இருப்பதாலும் நோய்கள் குணமாவதாலும் எந்நேரமும் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சிவகாசி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் இந்த இயற்கை உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மாறன்ஜியிடம் ஆலோசனைகளையும் கேட்டுச் செல்கிறார்கள்.மேலும் தமிழகத்திலேயே நோய்களைக் குணமாக்க ஆரம்பிக்கப்பட்ட முதல் இயற்கை உணவகம் இதுதான் என்பது சிறப்பு.

எனக்கு சொந்த ஊரு சிவகாசிதான். பிளாஸ்டிக் கம்பெனி வச்சு, நல்ல லாபம் பார்த்துக்கிட்டு இருந்த நான், நோய்களுக்கேற்ற இயற்கை உணவகத்தை நடத்த முக்கியக் காரணம் என்னோட அம்மா சந்திராதான். சில வருஷத்துக்கு முன்னாடி, அம்மாவுக்கு கடுமையான மூட்டுவலி இருந்துச்சி. ஹாஸ்பிட்டல்ல காட்டுனப்ப, ஆபரேஷன் பண்ணாத்தான் சரிப்படுத்த முடியும்னு டாக்டருங்க சொன்னதால, ஆபரேஷன் பண்ண அட்வான்சா ஒரு மாசத்துக்கு முன்னாடியே 25 ஆயிரம் ரூபாய் கட்டிட்டோம்.இடைப்பட்ட நாளுல தெரிஞ்சவங்க சிலர், முடக்கத்தான் தழையைப் பறிச்சு அம்மாவுக்கு ரசம் வச்சுக் கொடுத்தா வலி குறையும்னு சொன்னாங்க. அவங்க சொல்படியே ஆபரேஷன் நாள் வர்ற வரைக்கும் முடக்கத்தான் ரசம் வச்சுக் கொடுக்க ஆரம்பிச்சோம். ஒரு மாசத்துலேயே அம்மாவுக்கு மூட்டுவலி சுத்தமா போயிடுச்சு. முழுமையா குணமானதால, நாங்க ஆபரேஷனுக்குப் போகல. அதுக்காகக் கட்டுன பணம் தான் வேஸ்டா போச்சு. அப்போதான் பாரம்பரியமிக்க இயற்கை உணவுகளை சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நோய்களை அண்டவிடாம மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

மூலிகைகளின் மகிமையை உணர்ந்ததால, மருத்துவ உணவகத்தை நாமே ஏன் ஆரம்பிக்கக்கூடாதுன்னு யோசனை வந்துச்சு. அதோட விளைவுதான் கடந்த 6 வருஷமா நோய்களுக்கான இயற்கை உணவகத்தை வெற்றிகரமா நடத்திக்கிட்டு வர்றேன். இதுக்காக ஒரு வருஷம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகக்கலை அறிவியல் படிச்சது மட்டுமில்லாம, சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்கள்ல வசிக்கும் பாட்டிகளிடம் போய்க் கேட்டு இயற்கை தாவரங்களில் உள்ள மருத்துவக் குணம் என்னென்ன என்பதையும் ஆராய்ச்சி பண்ணினேன். ஆரம்பத்துல துளசி டீ, நிலவேம்புக் கஷாயம், டயாபட்டிக் கண்ட்ரோல் ஜூஸ், கறிவேப்பிலைக் கீர் போன்றவற்றை மட்டும் செஞ்சு, மொபட்ல எடுத்துக்கிட்டுப் போய் பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தேன். அன்று தன்னம்பிக்கையோடு கஷ்டப்பட்டது வீணாகல. இன்னிக்கு என்னோட ஹோட்டலுக்கு ஒரு நாளைக்கு 450 பேருக்கும் மேல நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள்" என்கிறார் மாறன்ஜி.

வங்கியில இருந்து 75 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கித்தான் இந்த ஹோட்டலை தொடங்கி இருக்கிறார் இவர். நாள் ஒன்றுக்கு வேலையாள் கூலிபோக ஹோட்டல் மூலமா 5,000 ரூபாய் வரைக்கும் லாபம் வருவதாகத் தெரிவிக்கிறார். எள்ளு,கொள்ளு,கேழ்வரகு, வரகு,தினை,கம்பு,பயறு வகைகள்,கோதுமை போன்ற தானியங்களையும் கற்றாழை, நெருஞ்சி முள், கீழாநெல்லி போன்ற 20 வகையான மூலிகைத் தாவரங்களையும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்தும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்யும் இயற்கை விவசாயிகளிடமிருந்து மட்டுமே தேவையானவற்றை நேரடியாகப் போய் வாங்கி வருகிறாராம். மேலும் பலருக்கு மாடிவீட்டு மூலிகைத் தோட்டம் அமைத்துக் கொடுத்து, அவர்களிடமிருந்தும் மூலிகைகளைப் பெற்றுக் கொள்கிறார்.

உடம்பு இளைக்க அருகம்புல் சாறு, மலச்சிக்கல் மற்றும் மூளைச்சூட்டை தணிக்க நெருஞ்சிமுள் சாறு, முடி உதிர்தலை தவிர்க்க கறிவேப்பிலைக் கீர், சிறுநீர் கல் அடைப்பைப் போக்க வாழைத்தண்டுச் சாறு, ஞாபக சக்திக்கு வல்லாரை சூப், ஆரோக்கியத்திற்கு தினைமாவு லட்டு, நவதானிய லட்டு, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரையும் பிற்பகல் 3 மணிக்கு மேல் முளைகட்டிய பயறு மற்றும் சுண்டல் வகைகள், சர்க்கரை நோயைக் குறைக்க வெந்தயக்களி,நெல்லிக்காய் ரசம், மூட்டு வலிக்கு முடக்கத்தான் ரசம், ரத்தசோகைக்கு பீட்ரூட் சூப், சளி, இருமலை போக்க துளசி டீ என்று 18 வகை நோய்களுக்கான இயற்கை உணவுகளையும் சூப்களையும் இங்கு தயாரித்து வருவது இந்த உணவகத்தின் சிறப்பு.

இன்டர்நேஷனல் நேச்சுராலாஜி அமைப்பின் (INO) மூலமாக மத்திய அரசின் சிறந்த இயற்கை உணவகம் என்ற விருதைப் பெற்றுள்ளது, மாறன்ஜியின் இந்தத் தாய்வழி இயற்கை உணவகம்.

தொடர்புக்கு: மாறன்ஜி 93674 21787

பூ.சர்பனா

Sunday, February 10, 2013

பிப்ரவரி 14க்கு 14

காதலின்(காமத்தின்)ஆரம்பம்  பார்வை,முடிவு 14.

1.ஏமாற்றப்பட்டுவிடுதல்
 2.கற்பை  இழந்துவிடுதல் 
3.தற்கொலை 
4.திருமணம் 
5.ஊரை விட்டு ஒடி விடுதல் 
6.பெற்றோரை விட்டு பிரிந்து விடுதல் 
7.காதலிப்பது பெற்றோருக்கு தெரிந்து விட்டால் மற்றவருக்கு திருமணம் செய்து வைப்பது 
8.கொலை செய்யப்படுதல் 
9.பெற்றோர் அவமானப்படுதல் 
10.வீட்டில் சிறை வைக்கப்படுதல்
11.தண்டிக்கப்படுதல் 
12.பெற்றோர்கள் காதலித்தவருடன் ஊரை விட்டு காலி செய்து விடுதல் 
13.காதலித்தவர் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளுதல் 
14.ஒருவரை காதலித்து கைவிட்டு விட்டு  வேறொருவரை  காதலித்தல் 


*ஆண்,பெண் காதலிப்பது(friendship) காமத்தின் வெளிப்பாடு .எனவே,
காதலிக்கும் காதலர்களே!!!நீங்கள் எந்த பட்டியலில் இருக்கிறீர்களோ தெரியவில்லை.இந்த காதல் தேவையா???எனவே பிடித்தமானவரை காதலித்துத்  திருமணம் செய்யாதீர்கள் பிடித்தமானவரை திருமணம் செய்துவிட்டு காதலியுங்கள்.


காதலர்கள் சிந்தனைக்கு ....
 .
#காதல்(காமம்)என்ற பெயரில் கண்ட கண்ட  இடங்களில் 
சுற்றித் திரியும் கா(ம)தல்ஜோடிகளே !!!திருமணம் செய்து விட்டு சுற்றுங்கள் ,நீங்கள் திருமணம் செய்யாமல் சுற்றினால் மற்ற ஜீவராசிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ???

#காதலுக்காக (காமத்திற்காக)பாசமூட்டி  வளர்த்த பெற்றோரை பரிதவிக்க விட்டுவிட்டு பிரியமானவர்களுடன் பறந்து செல்லும் காதலர்களே !!!நாளை உங்களுக்கும் பிள்ளை பிறந்து அந்த பிள்ளை காதலுக்காக (காமத்திற்கு)உங்களை விட்டு விட்டு  ஓடி விட்டால் உங்கள் நிலை என்னவாகும்,உங்கள் தலைகுனிவு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் ஏன் சிந்திப்பதில்லை???

#ஆடைகளை அழகாக வைத்துவிட்டு அந்தரங்கத்தை அசிங்கமாக வைத்து கொள்ளாதீர்கள்.ஆடைகளையும்,அந்தரங்கத்தையும் அழகாக வைத்து கொள்ளுங்கள் .

#காதல் (காமம்)என்ற பெயரில் கற்பை இழந்து விட்டு கண்ணீர் வடிக்காதீர்கள்.திருமணம் செய்து கொண்டு திருப்திகரமாக வாழுங்கள்.

வாழ்த்துக்கள் 
அமீர்

Sunday, January 20, 2013

இது உங்க ஏரிகள்...உள்ளே வாங்க!

கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏரிகளை சீரமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார் ஓர் இளைஞர்

                       
                                             
‘கூகுள் (GOOGLE) மாதிரி மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் கனவு. ஆனால், கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுச்சூழலைக் காக்க முழுநேரமும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிறார் 25 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி.

இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி என இந்தியா முழுக்க 12 ஏரிகளை மறுசீரமைப்பு செய்துள்ளார். இதற்காக யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், பள்ளி மாணவர்களை மட்டுமே திரட்டி, தன் சொந்த முயற்சியால் இதைச் செய்துவருகிறார் அருண். அண்மையில் இவருடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி, ஸ்விட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனம் விருது ஒன்றையும் கொடுத்து கௌரவித்துள்ளது.
                                     




எனக்கு சின்ன வயசிலேருந்தே பறவைகள்னா ரொம்பப் பிடிக்கும். அப்போ, சென்னையில நாங்க இருந்த பகுதியில கீழ்க்கட்டளைன்னு ஓர் ஏரி இருந்தது. பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு முக்கியமான நீராதாரம் அதுதான். அந்தப்பகுதியில் ஏகப்பட்ட பறவைகளும், மீன்களும், ஆமைகளும் இருந்தன. ஆனால், இன்றைக்கு அந்த ஏரி பெரிய குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. அதையெல்லாம் மீட்கிற பணியில்தான் இப்போ மும்முரமாக இருக்கிறோம். அதைத்தான் இந்தியா முழுக்க செய்யத் தொடங்கியிருக்கிறோம்" என்று பேசத்தொடங்கினார் அருண்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மைக்ரோ பயாலஜியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஐஐஎம்சியில் பட்டமேற்படிப்பையும் முடித்தார். படித்து முடிக்கவும் கூகுள் நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.

கூகுளில் வேலை பார்க்கும்போதே நண்பர்களோடு இணைந்து, ஆந்திராவில் இருக்கிற குருநாதன் செருவு என்கிற ஏரியை சக நண்பர்களின் உதவியோடு சுத்தம் செய்து முடித்திருக்கிறார். 2009ல் சென்னையில் இருக்கிற லட்சுமி புஷ்கரம் என்கிற ஏரியை சுத்தம் செய்திருக்கிறார்.

ஓர் ஏரியை சுத்தம் செய்வதென்பது அங்கிருக்கிற குப்பைகளை மட்டுமே எடுத்துப்போடுவது அல்ல. ஏரியைச் சுற்றி வேலி அமைத்தல், தூர்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது இதற்குமுன் அதைப் பற்றி சரியாக ஆய்வு செய்வது எனப் பெரிய வேலை. இதையெல்லாம் கண்காணித்து செய்வதற்கு என்னுடைய வேலையும் பணிச்சூழலும் மிகப்பெரிய தடையாக இருந்தது" என்கிற அருண், அதுவரை வெவ்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செய்துவந்த சேவைகளை தனியாகவே செய்ய முடிவெடுத்தார்.

ஒவ்வொரு பள்ளியிலும் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டு, நிறைய நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார். அதோடு, ஏரிகளை சுத்தம் செய்யும் ஆர்வமுள்ள மாணவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

                                             

2011ல் என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (EFI) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தன்னந்தனியாகத் தொடங்கினார். இது தற்போது இந்தியாவின் மூன்று நகரங்களில் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. இதை நிர்வகிப்பவர்கள், பங்குபெறுபவர்கள், உரிமையாளர்கள் எல்லாமே மாணவர்கள் மட்டும்தான். அனைவருக்குமே வயது 20க்கும் கீழ்தான். இதுவரை 900 பள்ளி மாணவர்கள் அருண் கிருஷ்ணமூர்த்தியோடு இணைந்து, இந்த ஏரிகள் மறுசீரமைப்புக்கு உதவி வருகின்றனர்.

இந்த மாணவர்களைக் கொண்டு தெருக்கூத்து மூலமாக மக்களிடையே ஏரிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேர்டு வாட்சிங் மூலமாக பறவைகளை அறிதல், இயற்கையைப் படம் பிடிப்பது என்று இந்த அமைப்பு எப்போதுமே செம பிஸிதான். அதோடு, இரண்டு டாகுமெண்ட்ரி படங்கள் எடுத்திருக்கிறார் அருண். அது சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளது.

எங்கள் நிறுவனத்துக்கு ஸ்பான்சர்கள் கிடையாது. நாங்கள் உதவி என்று கைநீட்டிக் காசு கேட்க மாட்டோம். கொடுத்தாலும் வாங்கவும் மாட்டோம். அதனால், என் செலவுகளுக்காகவும் இந்த அமைப்பை தொடர்ந்து நடத்தவும் ஒரு தகவல்தொடர்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கிற வருவாயில் பாதியை சமூக சேவைக்கும் மீதியை எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பிரித்துக்கொள்வேன்" என்று சொல்கிற அருணுக்கு சர்வதேச இளைஞர் சங்கமும் விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் ரோலக்ஸ் விருதுக்கான பரிசுத் தொகையை பணமாகத் தருவதற்குப் பதிலாக, சென்னையில் இருக்கிற கீழ்க்கட்டளை ஏரியை மறுசீரமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைக் கேட்டிருக்கிறார் அருண். அந்த நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் கீழ்க்கட்டளை ஏரியை சரிசெய்யும் பணி தொடங்கிவிடும்" என்கிறார் அருண்.

நன்றி-அதிஷா

Saturday, January 19, 2013

மாடே இல்லாமல் பால் உற்பத்தி!

தன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்துதரச் சொல்லி நச்சரிக்கிறவனைப் பார்த்து, ""காளை மாடு, காளை மாடு என்கிறேன், உழக்குப்பால், உழக்குப்பால் என்று கழுத்தறுக்கிறாயே'' என்று சீறுவார்கள். ஆனால், மாடே இல்லாமல் பாலை உற்பத்தி செய்கிற வித்தை சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் கைவந்த கலையாகிவிட்டது.

                                     

2008-ஆம் ஆண்டில் சீனா மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பால் மற்றும் குழந்தை உணவான பால் பொருள்களில் வேதிப்பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது, ""மாபெரும் பால் ஊழல்'' என்று பிரபலமானது.

ஏராளமான குழந்தைகள் உள்பட பலர் நோய்வாய்ப்பட்டதால் மேலை நாடுகள் சீனத்திலிருந்து பால் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தன.

சீனா ஏற்றுமதிசெய்த பால் மற்றும் பால் உணவுகளில் "மேலமைன்' என்ற தொழிலியல் வேதி கலக்கப்பட்டிருந்தது. தீப்பிடிக்காத கூரை மற்றும் தடுப்புகளைத் தயாரிக்க உதவும் "மேலமைன் பார்மால்டிஹைடு' என்ற பிளாஸ்டிக் ரோசனத்தை உற்பத்தி செய்யத் தேவையான கச்சாப்பொருள் "மேலமைன்'. அதைப் பாலுடன் கலந்துவிட்டால் கூடுதலான புரதச்சத்து இருப்பதைப்போல முதல் கட்டச் சோதனைகளில் காட்டும். ஆனால், "மேலமைன்', சிறுநீரகத்திலும் சிறுநீர் உறுப்புகளிலும் சேதமேற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணவுப் பொருள்களில் சேர்ப்பது உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

சீனாவின் பால் ஊழல், 2008 ஜூலையில் வெளிச்சத்துக்கு வந்தது. அடுத்த நவம்பருக்குள் மூன்று லட்சம் பேர் "மேலமைன்' ஏற்படுத்திய கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. சிறுநீரகத்தில் கல் உருவாவது முதலான பல்வேறு சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகக் குறைந்தது ஆறு குழந்தைகள் மரணமடைந்ததாகவும் தெரியவந்தது.

எப்படியாவது ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும் என்ற வெறியுடனிருக்கிற சீனத் தொழில்துறை தாம் பயன்படுத்துகிற வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்பன போன்ற "அல்ப விஷயங்களுக்காக' அலட்டிக் கொள்வதில்லை!

நம் நாட்டுப் பால் உற்பத்தியாளர்களில் சிலர் உரத்தைப் போட்டு, தீவனம் வளர்த்து, அதைப் பசு மாட்டுக்கு ஊட்டி அதன் பிறகு பாலைக் கறந்து விற்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற விஷயம் என்று எண்ணியோ என்னவோ - நேரடியாக - யூரியா, உரம், காஸ்டிக் சோடா, சமையல் எண்ணெய், சலவை சோப்புத்தூள், தண்ணீர் ஆகியவற்றுடன் கொஞ்சம் பாலையும் கலந்து செயற்கைப் பாலை நேரடியாகவே தயாரித்து விட்டார்கள். அது பார்ப்பதற்கு இயற்கையான பாலைப் போலவே நிறமும், செறிவும், கொழுப்பு உள்ளடக்கமும் கொண்டிருக்கும்.

"பால்செறிவு மானி'யும் எளிதில் ஏமாந்துவிடும். உணவு ஆய்வகங்களில் முதல் நிலைச் சோதனைகளிலும்கூட அந்தச் "செயற்கைப் பால்' தேறிவிடும். ஆனால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குப் பார்வைப்புலனும் செவிப்புலனும் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

சிறிதுகூட மனிதாபிமானமோ, பசு அபிமானமோ இல்லாமல் காசு மட்டுமே குறி என்றிருக்கிற சில பால் உற்பத்தியாளர்களுக்கு "ஆக்சிடோசின்' என்ற வேதி கை கொடுக்கிறது. இயற்கையான ஆக்சிடோசின், விலங்குகளின் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின்பகுதியில் உற்பத்தியாகிச் சேமித்து வைக்கப்படுகிற ஒரு ஹார்மோன். அது பெண்களின் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைப்பதற்கும் மார்பகத்திலிருந்து பாலை வெளிப்படச் செய்வதற்கும் உதவுகிறது. அந்த ஹார்மோன் செயற்கையாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

பிரசவத்துக்குப் பின் கருப்பையில் சிக்கல் ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு மருத்துவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். அதைக் கவனக் குறைவாகப் பயன்படுத்தினால் கருப்பை சேதப்பட்டுக் கிழிந்து கூடப் போகலாம்.

கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை ஆக்சிடோசின் மிகவும் மலிவாக, ஒரு குமிழ் ஐம்பது பைசா விலையில் கிடைக்கிறது. பால் கறப்பதற்குச் சற்று முன் அதைப் பால் மடியில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் கூடுதலாகப் பால் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பால்காரர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் அது பால் காம்பிலுள்ள சுருக்குத் தசைகளைத் தளர்த்திவிட்டுப் பால் வேகமாக வெளிப்பட மட்டுமே செய்கிறது. அத்துடன் அது பசுவின் இனப்பெருக்க உறுப்புகளைச் சேதப்படுத்தவும் கூடும். பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தவன் கதை மாதிரி, நிறையப் பால் கிடைப்பதைப் போலத் தோன்றினாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பசு பால் தருவது குறைந்து மலடாகவும் ஆகிவிடும். அதன் பிறகு அதைக் "கோ-சாலை'க்கோ (பசுப் பாதுகாப்பு இல்லம்), கசாப்புக் கடைக்கோ அனுப்ப வேண்டியதுதான்.

"ஆக்சிடோசின்' செலுத்திக் கிடைத்த பாலைப் பருகும் மனிதர்களுக்கும் குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கும் பலவிதமான உடலியல் கோளாறுகள் வரும். கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் அந்தப் பாலைப் பருகினால் பிரசவத்தின்போது கடுமையான உதிரப் போக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதில் தப்பிப் பிழைத்தாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். பார்வைத் திறனும் கேட்கும் திறனும் பாதிக்கப்படுவதாயும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மாடுகளுக்கு மட்டுமின்றிக் காய்கனி உற்பத்தியிலும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி, பூசணி, சுரை போன்ற காய்களில் ஆக்சிடோசினை ஊசி மூலம் செலுத்தினால் அவற்றின் பருமன் ஓரிரு நாள்களிலேயே இருமடங்காக அதிகரித்து விடுகிறது.

இவ்வாறு ஹார்மோன்கள் உணவுப் பொருள்களின் மூலம் உடலில் புகும்போது ஆண்மை மற்றும் பெண்மை பாதிக்கப்படும். சிறுமிகள் உரிய காலத்துக்கு முன்பே பருவமெய்தி விடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

பால்காரர்களை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை. எல்லாருமே பணம் சம்பாதிப்பதற்குப் பேயாக அலைகிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்த பின்னரும் அடுத்த ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க ஆலாய்ப் பறந்து எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடத் தயங்காதவர்களிருக்கிற நம்நாட்டில் சாதாரண வியாபாரிக்கு அந்த நாட்டம் இல்லாமலா போகும்?

சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு பிரபலமான நகைக் கடையில் ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து நகை செய்வதற்காக அதை உருக்கியபோது அதிலிருந்து ஒரு வட்டமான செப்புத் தகடு பிரிந்து வந்தது. நகைக் கடை முதலாளியிடம் கேட்டபோது, ""நான் என்ன செய்ய முடியும்? நானே சவரன் காசை இன்னொருவரிடம் வாங்கித்தானே விற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

இவ்வாறாக எல்லாப் பொருள்களின் விஷயத்திலுமே உற்பத்தியாளரிடமிருந்து புறப்பட்டுப் பல கைகள் மாறி நுகர்வோரைச் சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் கலப்படம் கூடிக் கொண்டே போகிறது.

அரிசியில் கல், மிளகாய்ப் பொடியில் செங்கல் தூள், மிளகில் பப்பாளி விதை, தேயிலையில் உளுந்துத் தோலி, மஞ்சள் பொடியில் நிறமேற்றப்பட்ட சுண்ணாம்புத் தூள், சர்க்கரையில் ரவை என்று ஜோடி சேர்ப்பதில் "முதுநிலை முனைவர்' பட்டம் பெறும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அரிசியைப் போலவே, பருப்பைப் போலவே, உளுந்து பயிறைப் போலவே தோற்றமளிக்கும் கல் குருணைகளை உருவாக்கும் யந்திரங்களை வடிவமைத்து, அவற்றுக்கு அரசின் அனுமதியையும் பெற்று "தொழில்' செய்கிறார்கள்!

இவ்வாறான கலப்படப் பொருள்களைச் சற்று பொறுக்கினால் பிரித்தெடுத்துவிட முடியும். ஆனால் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் மூலமாகத் தானியங்களுக்குள் பரவிவிடும் வேதிகளை எப்படி நீக்க முடியும்?

காய்-கனிகளுக்குக் கவர்ச்சி தரும் நிறங்களை ஏற்றவும், காய்கள் பழுக்காமலும் கனிகள் அழுகாமலும் தடுக்கவும் பயன்படும் வேதிகள், மரபியல் மாற்றம் செய்ய உதவும் வேதிகள் எனப் பல வேதிகளை நாம் உட்கொள்கிறோம். அதுமட்டுமின்றி உணவுப் பாக்கெட்டுகளில் அச்சிடப் பயன்படுத்தப்படும் சாய வேதிகளும் உணவில் கலந்து விடுகின்றன.

ஊறுகாய்களின் நிறத்தை மேம்படுத்தவும், டப்பியில் அடைக்கப்பட்டு வரும் காய்கறிகளின் பசுமை மாறாமல் தடுக்கவும் செப்பு வேதிகள் கலக்கப்படுகின்றன. தர்பூசணி, பட்டாணி, குட மிளகாய், கத்தரிக்காய் போன்றவை ஊசி மூலம் ஏற்றப்படும் வேதிகளால் மெருகேற்றப்படுகின்றன. ஆப்பிள் பழங்களுக்கு மெருகேற்றக் "காரீய ஆர்சனேட்' தெளிக்கப்படுகிறது.
மஞ்சள் பொடி மற்றும் மசாலாத் தூள்களில் "காரீய குரோமேட்' கலக்கப்படுகிறது. இவ் வேதிகள் ரத்த சோகை, குறைப் பிரசவம், முடக்குவாதம் போன்ற கோளாறுகளை உண்டாக்க வல்லவை.

இந்தியாவின் விவசாயிகள், ஐரோப்பிய விவசாயிகளைவிட 750 மடங்கு அதிகமான வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே மேலை நாடுகள் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

இந்தியத் தாய்மார்கள் தரும் தாய்ப் பாலில் குளோரின் மற்றும் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் தென்படுவதை ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. முலைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் முலைப் பாலில் மற்ற பெண்களின் முலைப் பாலில் உள்ளதைவிட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளின் எச்சங்கள் காணப்படுவதும் கண்டறியப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடியின் வேர்களின் மருத்துவ குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது. வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடி வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினார்.

ஜெர்மானிய நிறுவனம் அவர் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்றுநோயைத் தடுக்கும் வேதிகள் இருப்பதைக் கண்டு, கத்தரிச் செடி வேர் வேண்டாம், கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி கோரியது.

இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக் கிடந்த "நித்திய கல்யாணிச் செடி'யின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

எனக்குத் தெரிந்தவரை கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை இதுதான்!

நன்றி:-கே.என். ராமசந்திரன்