Thursday, April 11, 2013

வீடு கட்ட செங்கல் வேண்டாம் பிளாஸ்டிக் பாட்டில் போதும்!

சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிற பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்த முடியும் என நிரூபித்துள்ளது, ‘சமர்ப்பண்’ என்கிற தொண்டு அமைப்பு. தில்லியைச் சேர்ந்த இந்தத் தொண்டு நிறுவனம், செங்கலுக்கு மாற்றாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பசுமை வீடுகளை உருவாக்கி வருகின்றது.
                           
பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாக்கப்படும் வீடுகள் மிகவும் பாதுகாப்பானவை. அதனைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் பல்லாண்டுகள்வரை எந்தச் சேதாரமில்லாமல் உறுதியாக இருக்கும் தன்மை கொண்டவை. பொதுவிழாக்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களிலிருந்து காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கிறோம்.
                                                 

   
சேகரித்த பாட்டில்களை அளவு வாரியாகப் பிரித்து, சாலையோரங்களில் கிடக்கும் வீணான மண்ணைக் கொண்டு நிரப்பி, பாட்டிலை உறுதியாக்குகிறோம். அதன் பின்னர் அதனை கட்டிடப் பணிக்கு பயன்படுத்துகிறோம். பாட்டிலில் மண்ணை நிரப்ப பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பினர் எங்கள் அமைப்புக்கு உதவி செய்துவருகின்றனர்.
                                                 
பாட்டிலின் தட்டையான அடிப்பகுதியை வெளிப்புறம் மற்றும் தரைத்தளத்தில் இருப்பது போன்று பயன்படுத்தினால், சமநிலையில் இருக்கும். இந்த முறையில் பாட்டில்களை அடுக்கி, சுவரை சிமெண்ட் மூலம் எளிதாகப் பூச முடியும். இதனால், செங்கல் வாங்கும் செலவை முற்றிலுமாகக் குறைக்கலாம்.
                                               
ஒரு சதுர அடிக்கு 16 ஒரு லிட்டர் பாட்டில்கள் தேவைப்படும். மேலும் 15 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட ஒரு பசுமை வீடு கட்ட, சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதை பற்றி மேலும் அறிய....அவசியம் இந்த வீடியோவை பார்க்கவும்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QaFO95Ord_I


http://www.samarpanfoundation.org/website/index.php?option=com_content&view=article&id=95:house-construction-with-plastic-bottles&catid=52:delhi-projects&Itemid=66

                                            
செங்கல் பயன்படுத்துவதற்கு மாற்றாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பள்ளிகள், மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள், பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்" என்று கூறுகிறார், ‘சமர்ப்பண்’ சென்னை திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோமினி.
                                            

 பிளாஸ்டிக் பாட்டில் மூலம் கட்டப்பட்டும் வீடுகள் மழை மற்றும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்" என்கிறார் ரோமினி. இதுபோன்ற பசுமை வீட்டை, ‘சமர்ப்பண்’ தொண்டு அமைப்பு, தில்லியில் பள்ளிக் கட்டிடமாக கட்டிக்கொடுத்துள்ளனர்.


தற்போது செங்குன்றம் அருகே, பசுமை வீடு திட்டத்தினைச் செயல்படுத்த இந்த அமைப்பு சார்பாக பாட்டில்களை சேகரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அங்கு ஜெனரேட்டர் மேடை ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்டு, தளம் அமைப்பதற்கான ஆராய்ச்சிகளையும் ‘சமர்ப்பண்’ அமைப்பு தற்போது செய்து வருகின்றது.

என்.ஹரிபிரசாத்