Thursday, March 28, 2013

பால்கனியில் காய்கறிகள்!!!

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த லக்ஷ்மி தன் வீட்டு மாடியிலுள்ள பால்கனியை, பச்சைப்பசேல் என மினி தோட்டமாக மாற்றியுள்ளார். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், பழங்களை இத்தோட்டத்திலிருந்தே பறித்தெடுத்துக் கொள்கிறார். மனமும் கொஞ்சம் இடமும் இருந்தால், எல்லோருமே இப்படி தோட்டம் போடலாம்" என்கிறார் உற்சாகமாக...

என் பாட்டிக்கு செடி, கொடிகள் என்றால் அலாதிப் பிரியம். குழந்தைப் பருவத்தில் அவருடன் கேரளாவில் வளர்ந்தேன். அவருடனே இருந்ததால், குழந்தையாக இருந்தபோதே தாவரங்களின் மேல் எனக்கும் அன்பு வந்துவிட்டது. பாட்டியும் நானும் பல வகையான செடிகளை வளர்ப்போம். தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகளிடம்தான் ஓடுவேன். அதற்கு தண்ணீர் ஊற்றுவது, அன்றைக்கு புதிதாகப் பூத்திருக்கும் பூக்களை, பச்சைப் பசேலென்று பிஞ்சு விட்டிருக்கும் காய்களைப் பார்ப்பது, எத்தனை பூக்கள், காய்கள் புதுசாக வந்திருக்கின்றன என்று எண்ணுவது இவையெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களாக இருந்தன.

திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்துவிட்டேன். கேரளாவில் எங்கும் பசுமையாக இருக்கும். சென்னையில் அப்படியில்லை. ஆனாலும் செடிகளின் மேல் இருந்த ஆர்வம் மட்டும் குறையவில்லை. செடிகள் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. எதையோ பறிகொடுத்ததைப் போன்ற உணர்வு. அப்போதுதான் இந்த ஐடியா வந்தது. என் விருப்பத்தைப் புரிந்து கொண்ட கணவரின் உதவியுடன், என் வீட்டு பால்கனியில் சிறிய தோட்டம் அமைத்துக் கொண்டேன்.

பால்கனியில் சிறு சிறு தார்ப்பாய் பைகளிலும் மண் தொட்டிகளிலும் செம்மண், ஆற்று மண், தேங்காய் நார், ஆட்டுப்புழுக்கை, எரு, மக்கிய இலை மற்றும் தழைகள் போன்றவற்றை நிரப்பி, அதில் செடிகளை நட வேண்டும். செடியின் வேர்ப் பகுதியில் எப்போதும் நீரைத் தேக்கி வைக்க வசதியாக தேங்காய் நார்களை உபயோகிக்க வேண்டும்.

நாட்டுக் காய்கறிகளின் விதைகள், கீரை விதைகளை தொட்டியிலோ அல்லது பைகளிலோ விதைத்து விட்டால், 15 நாட்களில் முளைத்து விடும். அடுத்த 30வது நாளில் செடிகள் நன்கு வளர்ந்து, நமக்குத் தேவையான காய்கறிகளும் கீரையும் வந்துவிடும். ஒருநாள் விட்டு ஒருநாள் கீரை, காய்களைப் பறித்துக் கொள்ளலாம். 

என் வீட்டுத் தோட்டத்தில் முள்ளங்கி, லெமன் கிராஸ், பப்பாளி, தக்காளி, பஜ்ஜி மிளகாய், கத்திரிக்காய், காலிஃபிளவர், முருங்கை, கொத்தமல்லி, வல்லாரக்கீரை, அரைக்கீரை, காராமணி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிச் செடிகளை ஜாடிகள் மற்றும் பைகளிலும் குண்டு மல்லி, வெற்றிலை, பீர்க்கங்காய் மற்றும் புடலங்காய் போன்ற கொடி வகைகளை பந்தலமைத்தும் வளர்த்து வருகிறேன். இங்கு விளையும் காய்கறிகள் அனைத்துமே என் வீட்டிற்குப் போதுமானதாக உள்ளன. 

மேலும் அனைத்து செடிகளையும் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் நோயின்றி செழிப்பாக வளர்த்து வருகிறேன். குறிப்பாக, பூச்சித் தாக்குதலை தடுப்பதற்காக வசம்புப் பொடியை நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் மாதம் இருமுறை தெளித்து விடுவேன். அவ்வப்போது பஞ்சகவ்யா, ஆட்டுப் புழுக்கை போன்றவற்றையும் உரமாகப் பயன்படுத்துகிறேன். 

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வராது. தவிர, வீட்டு பால்கனியில் இருப்பதால் நமக்கு சுகாதாரமான சூழலும் சுத்தமான காற்றும் கிடைக்கும். மாலையில் சிறிது நேரம் செடிகளுடன் இருக்கும்போது, அனுபவப்பூர்வமாக இதை உணரலாம்" என்கிறார், செடிகளை வாஞ்சையாக வருடியபடி.பலருக்கு தாவரங்களின் மேல் ஈடுபாடு இருக்கும். ஆனால், நகரச் சூழலில் எப்படி தோட்டம் போடுவது, பராமரிப்பது என்று வழிமுறை தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்காக தற்போது லக்ஷ்மி தன் கணவருடன் சேர்ந்து, "GARDEN DEVELOPERS' என்ற நிறுவனத்தை நிறுவி வழிகாட்டுகிறார். தொடர்புக்கு: 94444 12111, 98401 20301.


-எல்லுச்சாமி கார்த்திக்